அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தி.மு.க சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுவதால் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து கொண்டிருக்கிறது. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சேனாபதி சுழன்றடித்து கொண்டிருந்த நிலையில், தனது வாரிசுகளை பிரசாரத்தில் இறங்கினார் வேலுமணி.
Also Read: வேலுமணிக்குக் குடைச்சல் தரும் கார்த்திகேய சிவசேனாபதி - அனல் பறக்கும் தொண்டாமுத்தூர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பரப்புரை முடிந்தது. அன்றைய தினம், கரும்புக்கடை பகுதியில் அ.தி.மு.க, தி.மு.க-வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பரப்புரை முடிந்தும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
ஏற்கெனவே, அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடாவை ஜரூராக முடித்துவிட்டன என்றே கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இரவு கார்த்திகேய சிவசேனாபதி குறித்து கடுமையாக விமர்சித்த நோட்டீஸ்களை தொண்டாமுத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்தனர்.
தகவலறிந்து தி.மு.க-வினர் களத்துக்கு சென்றபோது, நோட்டீஸ் மற்றும் வாகனத்தை போட்டுவிட்டு அப்படியே சென்றுவிட்டனர். இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாபதி புகாரும் அளித்திருந்தார். தேர்தல் விதிகளை மீறியதற்காக வேலுமணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், செல்வபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குசாவடி மையத்தை பார்வையிடுவதற்காக இன்று காலை கார்த்திகேய சிவசேனாபதி சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜக.-வினர் அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். காரில் இருந்தவரை, “வெளியில் வந்தா உன் தலையை வெட்டாமல்விட மாட்டேன்” என்று கொலை மிரட்டல் விடுத்தாக சேனாபதி புகார் தெரிவித்துள்ளார்.
காரையும் தாக்கி சேதப்படுத்தி நிலையில், போலீஸார் அவரை பத்திரமாக மீட்டு மற்றொரு காரில் அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், போலீஸார் லேசான தடியடி நடத்தி அதை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரான நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி, “பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க போகிறோம் என்ற பயம் வேலுமணிக்கு வந்துவிட்டது.
எப்படியாவது ரகளை செய்து, மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வாக்குப்பதிவை நிறுத்த பார்க்கின்றனர். வேலுமணியின் அண்ணன் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர், வீரமணி, ஐ.டி.பி.ஐ சம்பத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2PDNZ7h
via
