புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்விராயன்விடுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கௌரி. சிறு வயதிலேயே சமூக அக்கறை கொண்ட கெளரி, ஒரு கிராமத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து, `தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளார். கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் தனது திட்ட அறிக்கையை, மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும், அதோடு இந்த ஆய்வறிக்கை நூலை 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரி, மாணவி கெளரியின் தந்தை லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், ``என் மகள் கௌரி பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவர் சிறு வயது முதலே கிராமப்புற வளர்ச்சி குறித்துப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். அதில், ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பர்யத்தையும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடத்தியுள்ளார். குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள கிராம தெருக்கள், அதன் பாரம்பர்யம் குறித்தும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரி, குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் குழுவை உருவாக்கியது குறித்தும் அவர் விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார். அதன் பேரில் கிராம புள்ளிவிவரங்கள் அடங்கிய பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த கிராம புள்ளிவிவர பதிவை கிராம ஊராட்சிகள் மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் போல கிராம கலெக்டர் என்ற பதவியை ஒவ்வோர் ஊராட்சியிலும் கொண்டு வர உத்தரவிட வேண்டும். மேலும், இந்த ஆய்வறிக்கை நூலை 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும்.
Also Read: ``கிராமம்தோறும் `கிராம கலெக்டர்' இருக்கணும்!" - அரசுக்கு பரிந்துரைத்த மாணவி; பாராட்டிய நீதிபதிகள்!
என் மகள் உருவாக்கியிருக்கும், ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும் இந்தத் திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், ஆய்வு நூல் தயாரித்த மாணவிக்குப் பாராட்டுக்கள் தெரிவித்ததோடு, மாணவியை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு சில விளக்கங்களைக் கேட்டனர்.
தொடர்ந்து சில தகவல்களைக் கேட்டதோடு, நேரில் ஆஜராகி விளக்கமளிக்கச் சொல்லி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில்தான், இந்த வழக்கு விசாரணை மீண்டும் தற்போது நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ``மனுதாரர் கோரிக்கையானது அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பாக பரிசிலீக்கப்படும்'' என்றார். அப்போது, மனுதாரரின் கோரிக்கையை அரசு அமல்படுத்துவதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
``நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் தற்போதைய தமிழகத்தின் நிதி அமைச்சர், `ஏழை, பணக்காரன் யார் என்பதற்கான முழு புள்ளி விவரம் அரசிடம் இல்லை. புள்ளிவிவவர பதிவு இல்லாமல் நாம் எந்த ஒரு வளர்ச்சியையும் உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்க்க முடியாது. அதனால், வளர்ச்சியும் பாதிக்கப்படும்' என்ற உண்மையைப் பேசியிருக்கிறார். இது ஒன்று போதும், என் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவார்கள். அதனடிப்படையில் தான் கிராமப்புற ஆய்வுத் திட்டத்தையே உருவாக்கினேன். என்று நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் மாணவி கௌரி.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3stWdhj
via
