மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே கம்பெனியில் வேலை செய்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி 5-வதாக திருமணம் செய்துள்ளார். முன்னதாக தான் வேலை பார்த்த பல ஊர்களில் இது போல் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கல்யான மன்னனாக வலம் வந்திருப்பது பின்னர் தெரியவர பெரும் அதிர்ச்சி. அந்த இளைஞரை கைது செய்த போலீஸ் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை மேலவீதி, சிங்காரபுரம், மெகபூபாளையத்தை சேர்ந்தவர் சவுகத அலி (35). இவர் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கம்பெனியில் கும்பகோணம், நாச்சியார்கோயில் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்திருக்கிறார்.அப்போது சவுகத் அலிக்கும், அந்த சிறுமிக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
அந்த சிறுமியிடம் நல்லவர் போல் நடித்து பழகி வந்துள்ளார் சவுகத் அலி. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி வேலைக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து அவரது பெற்றோர்கள், நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.
மேலும் சிறுமி வேலை பார்த்த கடைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது மதுரையை சேர்ந்த சவுகத் அலியும், அந்த சிறுமியும் நெருங்கி பழகியதும் காணாமல் போன அன்று சவுகத் அலி அந்த சிறுமியை பைக்கில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அதன் பிறகு தீவிர விசாரணை மேற்கொண்டும் சவுகத் அலி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு பிறகு சவுகத் அலி கேரளாவில் வசித்து வருவது தெரிந்து அவரை கைது செய்த போலீஸ் சிறுமியை மீட்டுள்ளனர்.
Also Read: ``தமிழகத்தில் குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் வழக்கு பாயும்!" – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!
சவுகத் அலியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல அதர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்ததில், ``காணாமல் போன அன்று அந்த சிறுமி தான் பயன்படுத்திய செல்லை வீட்டிலேயே வைத்து விட்டு சிம்கார்டை மட்டும் எடுத்து கொண்டு சென்றுள்ளார். செல்போன் இருந்தால் மாட்டிகொள்வோம் என சவுகத் அலி யோசனை சொன்னதால் அப்படி செய்துள்ளார் அந்த சிறுமி.
நாங்கள் சவுகத் அலியின் செல்போனை ட்ரேஸ் செய்ததில் அவரது செல்போன் திருப்பூர் பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் திருப்பூருக்கு சென்று விசாரணை செய்ததில், சவுகத் அலி தான் கோவையில் இருக்கிறேன் செலவுக்கு பணம் இல்லை என கூறி அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் தனது செல்போனை விற்றுள்ளான். அதன் பிறகு அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 5 மாதமாகவே அவனை பற்றிய தேடுதலை நாங்க குறைக்கவில்லை. மேலும் சவுகத் அலி பேங்க் அக்கவுண்ட்டை கண்காணித்து வந்தோம். இதில் அவனது அக்கவுண்ட் நம்பருக்கு பணம் வருவதும் அதனை ஏடிஎம் மிஷினில் எடுப்பதும் கண்டு பிடித்தோம். எந்த ஊர் ஏடிஎம்மில் பணம் எடுக்கிறார் என்பதை ஆராய்ந்த போது அவன் கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கேரளா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்ற தனிப்படை போலீஸ் சவுகத் அலியை கைது செய்ததுடன் அவனுடன் இருந்த சிறுமியையும் மீட்டு கும்பகோணம் அழைத்து வந்தனர். பின்னர் அவனிடம் விசாரணை செய்ததில் 5-வதாக அந்த சிறுமியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது. சவுகத் அலி பெங்களூருவில் வேலை செய்த போது காதலிப்பதாக கூறி ஒரு பென்ணை திருமணம் செய்துள்ளார்.
Also Read: `போதிய ஆதாரங்கள் இல்லை!' - 5 வயதுக் குழந்தை சிறார் வதை வழக்கு; 55 வயது முதியவர் விடுதலை
அதே போல் அவரின் சொந்த ஊரான மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் வேலை பார்த்த இடத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்து கல்யாண மன்னனாகவே வலம் வந்துள்ளார். ஐந்தாவதாக சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் வகையாக சிக்கி கொண்டார்..ஏற்கனவே திருமணம் செய்த பெண்களின் நிலை என்ன? அவர்களுடன் சில மாதங்கள் வாழ்ந்து விட்டு நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு விரட்டி விட்டாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததால் சவுகத் அலியை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்து விட்டோம். மீட்கப்பட்ட அந்த சிறுமியிடம் அறிவுரைகள் கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
from மாவட்ட செய்திகள் https://ift.tt/37WMCq0
via
