திண்டுக்கல் எருமைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் திருமணமாகி 12 வயது மகனும் உள்ளனர். மணிகண்டன், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். மணிகண்டனின் தந்தை ஜெயமுருகன், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையை மணிகண்டனின் மனைவி தற்போது நடத்தி வருகிறார்.
மணிகண்டன், வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை தேனியில் இருந்து திண்டுக்கலுக்கு வந்த மணிகண்டன், பர்னிச்சர் கடைக்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டனின் மனைவி, அவர்களுடைய மகனை மட்டும் மணிகண்டனுடன் விட்டுவிட்டு அருகிலுள்ள கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இரவு 8 மணிக்குமேல், திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் கடைக்குள் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதைப் பார்த்த மகன், அலறியபடியே கடையை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டான். அந்த கும்பல், மணிகண்டனின் தலையை வெட்டி சிதைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
Also Read: சென்னை: மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!
சம்பவ இடத்தில் போலீஸார், துப்பறியும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களையும் ஆய்வு செய்ததுடன் அருகில் உள்ள கடைக்காரர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாகப் போலீஸார் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், “மணிகண்டனின் கடையில் 4 பேர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களை மணிகண்டன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக அந்த 4 பேருக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்ததால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சி.சி.டி.வி காமிரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம், பின்னணி குறித்து முழுமையாகத் தெரிய வரும். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பகுதியில் கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VCp0Er
via
