தமிழக அரசின் அனுமதிபடி இன்றுமுதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்கலாம் என அனுமதி தரப்பட்டிருப்பதால், ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் கிட்டத்தட்ட நான்கு மாத இடைவெளிக்குப்பிறகு மக்களை வரவேற்க ஆரம்பித்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஒராண்டுக்கும் மேலாகவே கொரோனாவால் தியேட்டர்கள் முடங்கியிருப்பதால் 50-க்கும் மேற்பட்ட பெரிய பட்ஜெட் படங்கL ரிலிஸுக்கு காத்திருக்கின்றன. வரும் வெள்ளியன்று சுந்தர்.சி இயக்கியிருக்கும் 'அரண்மனை-3', விஜய்சேதுபதியின் 'லாபம்' உள்பட சில படங்கள் ரிலீஸாவதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அரசின் அனுமதி கிடைத்தும் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்கிறார்கள். இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.
''இன்னிக்கு 40 சதவிகித தியேட்டர்கள்தான் திறந்திருக்காங்க. கடந்த சனிக்கிழமைதான் 'தியேட்டர் திறக்கலாம்'னு அறிவிப்பு வெளியானதால, உடனடியா புதுப்படங்கள் ரிலீஸ் பத்தி நேத்து (ஞாயிற்றுகிழமை) பேச முடியல. வரும் வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள் ரிலீஸ் இருக்கும் என்பது குறித்த பேச்சு வார்த்தை இன்று அல்லது நாளைதான் நடக்கும். ஆனா, 'லாபம்', 'அரண்மனை- 3', 'சிவகுமாரின் சபதம்' 'குருதி ஆட்டம்', 'பிசாசு-2'னு பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. ஒருசில இந்தி, ஆங்கில படங்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆகுது. தியேட்டர் திறந்தாலும் நாங்க இயல்பு நிலைக்கு திரும்ப குறைஞ்சது பத்துநாளாவது ஆகும்'' என்றார்.
இப்போது ஐம்பது சதவிகித பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி என்பதால் பெரிய பட்ஜெட் படங்களை திரையிட்டால், போட்ட முதலீட்டை எடுக்க முடியாது என தயாரிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள். 2022-ல் கொரோனா அச்சம் முழுமையாக நீங்கிவிடும் என எதிர்பார்ப்பதால் அடுத்த ஆண்டே பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸை வைத்துக்கொள்ளலாமா என்கிற பேச்சுவார்த்தையும் நடக்கிறதாம்!
அப்ப தீபாவளி ரிலீஸ்?!
from தமிழ் சினிமா https://ift.tt/3D3WCfn
via
