ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும், சோதனையிடுவது என்பது போதாது. அதற்காக தனி நீதிமன்றங்கள் அமைத்து, விசாரணை நடத்தி, உள்நாட்டில் இருந்தாலும்,வெளிநாடுகளில் இருந்தாலும் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க வேண்டும் என தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது, " கொரோனா தொற்று மூன்றாவது அலை வருவதாக சொல்கிறார்கள்,ஆனால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் முகக்கவசம் அணியாமல் காணப்படுகின்றனர். எனவே இதனை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மூன்றாவது அலையை தடுக்க முடியும்.
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அடுத்து வரக்கூடிய பட்ஜெட்டுக்கு இது ஒரு முன்னோடியாக அமையும்.தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசு ஒரு வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறது.
Also Read: ரெய்டு பின்னணி: ``இரவில் வந்த போன்கால்; பரபரப்பான வேலுமணி!”
குறிப்பாக வெள்ளை அறிக்கையில், முடிவுரை பகுதி தெளிவாக உள்ளது. மற்ற அறிக்கைகளை விட இந்த அறிக்கையில் நிதியமைச்சரே கையெழுத்திட்டு தந்துள்ளார். அவர் குறிப்பிடுகையில்,இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அனைத்தும் நான் பொறுப்பேற்கிறேன் என கூறியுள்ளார் இது இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெறாத நிகழ்வு, புதுமை, அமைதி புரட்சி.
கடந்த 7 ஆண்டு காலங்களில் நடைபெற்ற தவறுகள், போதாமைகள், சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்ட செலவுகள் போன்றவை இனி எக்காலத்திலும் திரும்பி வரக்கூடாது என இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆண்டு காலத்தில் இதை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை தருவது மட்டுமல்ல, ஒரு புதுமையை புகுத்தி,மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேக்கேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு மீனுக்கு தலையும்,பாம்புக்கு வாலும் என்பது போல கர்நாடக அரசுக்கும்,தமிழக அரசுக்கும் இடையே அதன் செயல்பாடு உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிடுவது என்பது பழிவாங்கும் செயல் அல்ல, அவை ஆதரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும், சோதனையிடுவது என்பது போதாது, அதற்காக தனி நீதிமன்றங்கள் அமைத்து, விசாரணை நடத்தி,உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க வேண்டும்.
சிறை தண்டனை பெற்றாலும் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரியாகவே இருக்கிறார்,ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதே, அவர் பேச்சுக்களிலிருந்து தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது என தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yBYskW
via
