சென்னையின் அதிகாரப்பூர்வ கொடியையும் சின்னத்தையும் பார்த்ததுண்டா? உருவாக்கியவர் யார் தெரியுமா?

0

சமூக வலைத்தளங்களில் நேற்று முழுவதும் சென்னையை பற்றிய பெருமிதப் பதிவுகள் திக்குமுக்காட வைத்தன. ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ம் நாள் சென்னை நாள் கொண்டாடப்பட்டு வருவதால், நேற்று சென்னை நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின. சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டன. ஆனால் இந்த சென்னை இன்றைக்கு நம்மோடு இருப்பதற்குக் காரணமான ஓரு முக்கிய நிகழ்வு குறித்தும், சென்னையின் அதிகாரப்பூர்வ கொடி மற்றும் சின்னம் குறித்தும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை.

சென்னையின் சின்னம் மற்றும் கொடி
இதுகுறித்து மிகவும் சுவாரஸ்யமான உணர்வுப்பூர்வமான தகவலை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார் எழுத்தாளர் கதிர் நிலவன்.

’’சென்னை, இன்றைக்கு தமிழ்நாட்டோடு இருக்கிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னையை ஆந்திராவோடு இணைக்க, அங்குள்ளவர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். விசால ஆந்திரா என்ற கோரிக்கையை முன் வைத்து போராடிய பொம்மு ஸ்ரீராமுலு ரெட்டி, சென்னையை ஆந்திராவோடு இணைக்கக்கோரி உன்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்ததால், அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆந்திராவோடு சென்னையை இணைக்க முடிவு எடுத்துவிட்டார்.

மா.பொ.சி

ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தவருமான மா.பொ.சி மற்றும் அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் செங்கவல்ராயன் உள்ளிட்டவர்கள், சென்னையை தமிழ்நாட்டோடு தக்கவைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடியதை எதிர்த்து, தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் எனச் சென்னை மாநகாரட்சிக் கூட்டத்தில் முழங்கினார்.

மா.பொ.சி மற்றும் செங்கல்வராயன் முயற்சியினால், சென்னை தமிழர்களுக்கே சொந்தம் என சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜிக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். அதன் விளைவாக, சென்னையை ஆந்திராவோடு இணைத்தால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ராஜாஜி அறிவித்தார். பிரதமர் நேருவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டதால், தன் முடிவை கைவிட்டார். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை தக்க வைக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என அன்றைக்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியிருக்காவிட்டால் அது ஆந்திரா வசம் சென்றிருக்கும்.

'சென்னை நாள்' கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் இதை சொல்வதில்லை. சென்னை மாநகராட்சிக்கு என அதிகாரப்பூர்மான சின்னமும் கொடியும் உள்ளது. இதுவும் மக்களின் கவனத்திற்கு சென்று சேரவில்லை.
எழுத்தாளர் கதிர்நிலவன்

இந்தக் கொடி தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே மாநகராட்சியின் கொடியாகத் திகழ்கிறது. மேலும் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்த கடலோடிகள் என்பதைக் குறிப்பிடும் வகையில், கடலும் கப்பலும் சென்னை கொடியில் இடம்பெற்றுள்ளன. சென்னையை மீட்ட மா.பொ.சி-தான் இந்தச் சின்னத்தை உருவாக்கினார்.

Also Read: மெட்ராஸ் டே: சென்னைக்கு வயது 382... அதன் வரலாற்றிலிருந்து சில அரிய காட்சிகள்! | Photo Essay

சென்னை மாகராட்சியின் கொடியையும் சின்னத்தையும் சென்னை நகரில் ரிப்பன் மாளிகை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாதது வருத்தமளிக்கிறது. சென்னை மாநகரம் முழுவதும் பறக்கவேண்டிய இக்கொடி மாநகரில் வேறு எங்குமே பறக்கவிடப்படவில்லை. குறைந்தபட்சம் சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் இந்த கொடியை பறக்கவிட வேண்டும். குறிப்பாக, சென்னை மாநகர கொடி சென்னையின் மையப்பகுதியில் எப்போதும் நிரந்தரமாக பறக்க வேண்டும். இனிவரும் ஆண்டுகளிலாவது, சென்னை நாள் கொண்டாடும்போது, இக்கொடியை சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்றி, சென்னை மீட்பு வரலாற்றையும் சேர்த்து நினைவுகூர வேண்டும்.

ரிப்பன் மாளிகை, சென்னை மாநகராட்சி
இதுவே சென்னையை மீட்ட மா.பொ. சி-க்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்களுக்கும் தமிழர்கள் செய்யும் மரியாதையாக இருக்கும். இந்தக் கொடியும் சின்னமும் தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றக்கூடியவை’’ என்றார்.


from மாவட்ட செய்திகள் https://ift.tt/3kemjkJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*