ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தமிழக எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும், இலங்கைக் கடற்படையினர் இந்த எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு மீன்துறை அலுவலகத்தில் பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
கச்சத்தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அதிவிரைவு படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது பாட்டில்கள், கற்களை எரிந்து தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் பாம்பன், காமராஜர் நகரைச் சேர்ந்த செல்வம் என்ற மீனவருக்கு தலையில் கல்லடி பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று காலை மண்டபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார்.
இதேபோன்று 8 மீனவர்களின் படகுகளில் உள்ள வலைகளை வெட்டிவிட்டு இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகக் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் பேசினோம், “எப்போதும் போல கடல்ல வலையை வீசி மீன் பிடிச்சுக்கிட்டிருந்தோம். திடீர்னு நாலஞ்சு படகுல வந்த இலங்கைக் கடற்படையினர் கருங்கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் தூக்கி எங்க மேல எறிஞ்சாங்க. எங்க நாட்டு எல்லைக்குள்ளதான வலை போட்டிருக்கோம்னு சொன்னதும், கண்ணாடி பாட்டில்களை உடைச்சு பீங்கான்களைத் தூக்கி எறிஞ்சாங்க.
நாங்க விரிச்சுருந்த வலைகளை வெட்டி எங்களை விரட்டினாங்க. உடனே நாங்களும் உயிர் பிழைச்சாப் போதும்ணு கரைக்குத் திரும்பிட்டோம். இலங்கைக் கடற்படையினரோட தொடர் அட்டூழியத்துனால எங்களோட வாழ்வாதாரமே கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வுகாண முடியும்” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yFXG6v
via
