கட்டைப்பைக்குள் மறைத்து குழந்தையைக் கடத்திய பெண்; கதறிய தாய்; செல்போன் நம்பரால் 30 மணிநேரத்தில் கைது

0

தஞ்சாவூர் அருகே பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் - ராஜலெட்சுமி தம்பதி. இருவரும் தங்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நிலையில் கப்பிணியான ராஜலெட்சுமியை பிரசவத்துக்காக அவரது கணவர் குணசேகரன் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் ராஜலெட்சுமி-குணசேகரன்

கடந்த செவ்வாய் கிழமை ராஜலெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. உதவிக்கு யாரும் இல்லாத ராஜலெட்சுமிக்கு பெண் ஒருவர் உதவி செய்து வந்துள்ளார்.மூன்று நாள்களாக கூடவே இருந்து உதவியதால் அந்த பெண் மீது ராஜலெட்சுமி குணசேகரனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை பாத்ரூமுக்கு சென்று விட்டுத் திரும்பிய ராஜலெட்சுமி தனது குழந்தை காணாதததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தனக்கு உதவியாக இருந்த பெண்ணையும் காணவில்லை. இதையடுத்து குணசேகரன் போலீஸில் புகாரளித்தார். உடனடியாக விசாரனையில் இறங்கிய போலீஸார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். ராஜலெட்சுமி தம்பதிக்கு உதவியாக இருந்த பெண், பச்சை நிற கட்டைப்பைக்குள் குழந்தையை வைத்துக் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்து நான்கு நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.

குழந்தையை கடத்திய விஜி

இதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்கவும், அந்த பெண்ணைக் கைது செய்யவும் தஞ்சாவூர் எஸ்.பி.ரவளி பிரியா மூன்று தனிப்படை போலீஸ் டீம் அமைத்து உத்தரவிட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைத் தவிர வேறு எந்த துப்பும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டை காலனி தெருவை சேர்ந்த விஜி என்பது தெரியவந்தது. அவர் தன்னுடைய வீட்டில் குழந்தையுடன் பதுங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார் குழந்தையை மீட்டதுடன், விஜியையும் கைது செய்தனர். குழந்தை சோர்வாக இருப்பதைப் பார்த்த போலீஸ் கடத்தப்பட்டு 30 மணி நேரம் ஆச்சு குழந்தை தாய்ப்பாலும் குடிக்கலைனு அதன் ஆரோக்கிய விஷயத்திலும் அக்கறை கொள்ள முன்னதாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சையளித்தனர்.

அரசு மருத்துவமனை

அதன் பின்னரே தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றனர். மருத்துவமனையில் இருந்த ராஜலெட்சுமி -குணசேகரன் தம்பதியிடம் 30 மணி நேரத்திற்கு பிறகு எஸ்.பி ரவளி பிரியா குழந்தையை ஒப்படைத்தார். ``குழந்தை கிடைக்கலைன்னா நான் என்னாகிருப்பேனு தெரியாது மேடம் என்னோட உசுர எங்கிட்ட சேர்த்துட்டீங்க" என அடக்க முடியாத ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தி எஸ்.பி ரவளி பிரியாவுக்கு நன்றி தெரிவித்தார் ராஜலெட்சுமி. அப்போது அங்கிருந்த அனைவரும் போலீஸ் டீமிற்கு கைத்தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் விஜி. இவருக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் பாலமுருகன் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து வசித்து வருகிறார். விஜிக்கு குழந்தையில்லை. தனக்கென ஒரு குழந்தை இல்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. அத்துடன் தனக்கு குழந்தை பிறந்தால் அதை வைத்தே தன் கணவர் பாலமுருகனிடமுள்ள சொத்துக்களை வாங்கிவிடலாம் எனவும் நினைத்திருக்கிறார்.

Also Read: ஆசை வார்த்தை கூறி குழந்தை கடத்தல்... 24 மணி நேரத்தில் மீட்ட கோவை போலீஸ்!

போலீஸ் டீமை பாராட்டும் மக்கள்

இதையடுத்து பாலமுருகனிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ஏமாற்றியிருக்கிறார். சினிமாவில் வருவது போல் தனது வயிற்றில் தலையணையை கட்டி வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக பாலருமுருகனை நம்ப வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் குழந்தையைக் கடத்திச் செல்லும் திட்டத்தோடு தஞ்சை மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் உதவிக்கு ஆளில்லாமல் தவித்த ராஜலெட்சுமி குணசேகரன் தம்பதிக்கு உதவியாக இருப்பது போல் நடித்துக் குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கிறார்.

மாட்டிக்கொள்ளக் கூடாதென கவனமாகச் செயல்பட்ட விஜி தனது செல்போன் நம்பரை கூட ராஜலெட்சுமி தம்பதியிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் குழந்தையை கடத்துவதற்கு முன்பு குழந்தைக்காக பேம்பர்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது பரிசுத் தொகை பெறுவதற்காகக் கொடுக்கப்பட்ட கூப்பனில் தன்னுடைய செல் நம்பருக்கு பதிலாக தனது தோழி ஒருவரின் செல்போன் நம்பரைக் குறிப்பிட்டிருக்கிறார். அதை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த செல்போன் நம்பருக்கான கால் ஹிஸ்டரியும் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில் விஜி தன் தோழிக்கு போன் செய்து தனக்குக் குழந்தை பிறந்தாகவும், டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் பட்டுக்கோட்டைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறிவிட்டுத் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். விஜியின் தோழியிடம் விசாரித்துக் குழந்தையைக் கடத்தியவர் விஜிதான் என்பதை உறுதி செய்து அதன் பிறகு அவரிடமிருந்து குழந்தையை மீட்டதுடன், விஜியையும் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DmuraA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*