விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வனத்தோட்டக் கழக அலுவலகத்தில், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையொட்டி, ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் வேட்டை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கடந்த 11ம் தேதி அங்கு திடீர் சோதனை நடத்தினர். அதில், அலுவலக அறையிலிருந்து ரூ.200, ரூ.500எனக் கட்டுக்கட்டாக ரூ.35லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, வனத்தோட்ட கழக அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாகப் புதுக்கோட்டை வனத் தோட்ட கழக மண்டல மேலாளர் நேசமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மச்சுவாடி, பெக்சல் நகரில் நேசமணிக்குச் சொந்தமான வீடு இருக்கிறது.
Also Read: லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு

அங்கு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி இமயவர்மன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 8-மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை வரையிலும் நீடித்தது. சோதனையில், முக்கிய ஆவணங்கள் பல சிக்கின. இதில், நேசமணி, அவரது மனைவி பெயரில் போஸ் நகரில் ஒரு இடமும், டெக்ஸ்டைல், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை என சுமார் 4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் கைப்பற்றினர். அதோடு, கணக்கில் வராத ரூ.41,000 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அரசு அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mIbwAk
via
