கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் தனபாலன். இவரின் வீட்டில் சந்தேகப்படும் படியாக வெளியூரைச் சேர்ந்தவர்கள் நடமாட்டம் உள்ளதாக இரணியல் காவல் நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து போலீஸார் அதிரடியாக தனபாலனின் வீட்டில் சோதனை நடத்தினர்.
போலீஸார் வருவதை அறிந்த தனபாலன் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டுக்கு அருகே நின்ற சொகுசு காரில் இருந்த ஐந்துபேரை மடக்கிய போலீஸார், அவர்களிடம் இருந்து சாம்பிராணி கட்டிகள் போன்ற 2 கட்டிகளை பறிமுதல் செய்தனர். அந்தக் கட்டிகள் குறித்து விசாரித்தபோது அது திமிங்கலம் உமிழும்போது வெளியாகும் திரவத்தில் உருவாகும் அம்பர்கிரீஸ் கட்டி என தெரியவந்தது. அந்தக் கட்டிகளை விற்பனை செய்யக்கூடாது என இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சுல்த்தான், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த சில்வஸ்டர், வர்ஜித், சென்னையைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோரை இரணியல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், 5 கிலோ எடைகொண்ட அம்பர்கிரீசை சுங்கான்கடையைச் சேர்ந்த தனபாலன், ரூத் ஆகியோருக்கு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரியவந்தது. அம்பர்கிரீஸ் வனத்துறையால் தடைச் செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு போலீஸார் அந்த ஐந்துபேரையும் வேளிமலை வனச் சரகர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஐந்துபேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "திமிங்கலங்கள் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க மெழுகுபோன்ற திரவத்தை வாய்வழியாக வெளியேற்றும். மெழுகுபோன்ற திரவம் அலையில் அடித்துவரப்பட்டு கட்டியாகி கடற்கரையில் திரண்டுவரும். இதற்கு அம்பர் கிரீஸ் எனப் பெயர். இது ஆபரணங்கள் செய்யவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் கிரீஸை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சிலர் அம்பர் கிரீசை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றனர். சுங்கான்கடையில் வாடகைவீடு எடுத்து வசித்துவந்த கோட்டாறைச் சேர்ந்த தனபாலன் வீட்டில் வைத்து அம்பர் கிரீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுக்கு சென்னையில் நெட்வொர்க் இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Yv3zqp
via
