கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் மற்றும் அக்டோபரில் வழங்க வேண்டிய நீரையும் சேர்த்து மொத்தமாக 40 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை, கர்நாடக அரசு மதிப்பதே இல்லை. எனவே தற்போது 40 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தினால் மட்டும் போதாது. இக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் நேரடியாக களத்தில் இறங்கி இதை செயல்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 53-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் ராம மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்து கொண்ட பிரநிதிகள், ``காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு உரிய காலத்தில் முறையாக, முழுமையாக வழங்குவதில்லை. கடந்த செப்டம்பர் வரை வழங்க வேண்டிய நீரில் 25.84 டிஎம்சி நீரை இன்னும் வழங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய 20 டிஎம்சி நீரில் 6.54 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. எனவே செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும், அக்டோபரில் வழங்க வேண்டிய நீரில் மீதியுள்ள 14.46 டிஎம்சி நீரையும் உடனடியாக திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசு, மொத்தமாக 40 டிஎம்சி நீர் தற்போது உடனடியாக வழங்கினால் மட்டுமே தமிழக விவசாயிகளின் தற்போதைய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்” என்று தெரிவித்தார்கள்.
Also Read: `காவிரி ஆணையத்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை; கலைத்துவிடலாம்!' - கொதிக்கும் பெ.மணியரசன்
இதனை ஏற்றுக்கொண்ட காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார், ``கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் மற்றும் அக்டோபரில் வழங்க வேண்டிய நீரையும் சேர்த்து மொத்தமாக 40 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட இந்த முடிவு, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை, கர்நாடக அரசு மதிப்பதே இல்லை. இக்குழுவும், ஆணையமும் கடந்த காலங்களில் பிறப்பித்த உத்தரவுகளை ஒரு முறை கூட கர்நாடகம் செயல்படுத்தியதே இல்லை. எனவே தற்போது 40 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தினால் மட்டும் போதாது. இக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் நேரடியாக களத்தில் இறங்கி இதைச் செயல்படுத்த வேண்டும். மத்திய பாதுகாப்பு படையின் முன்னிலையில், காவிரி ஆணையமும் ஒழுங்காற்று குழுவும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்’’ என தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iWbV14
via
