உள்ளாட்சித் தேர்தல்: திமுக - அதிமுக மோதல்; அமைச்சரின் கார் கொடிக் கம்பி சேதம் - போலீஸ் குவிப்பு!

0

ஊரக உள்ளாட்சித் தேர்தலின், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் 9-ம் தேதி நடபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிவுக்கு வந்தது.

தொண்டர்களிடையே வாக்குவாதம்

திசையன்விளை யூனியனுக்கு உள்பட்ட கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் பிரசாரத்தை முடிக்கத் திட்டமிட்டு, அ.தி.மு.க-வினர் காவல்துறையில் அனுமதி வாங்கியிருந்தனர். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் தலைமையில் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Also Read: பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

அதே நேரம் கரைச்சுத்துபுதூர் கிராமத்தில் பிரசாரத்தை நிறைவு செய்ய தி.மு.க-வினரும் முடிவு செய்து காவல்துறையில் அனுமதி பெற்றனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன் உள்ளிடோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகே அ.தி.மு.க-வினரின் கூட்டமும் நடைபெற்றது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அமைச்சரின் காரை மறித்ததால் பரபரப்பு

கூட்டத்தை முதலிலேயே முடித்துக் கொண்ட தி.மு.க-வினரின் வாகனங்கள், அ.தி.மு.க-வின் கூட்டம் நடந்த இடத்தின் வழியாகச் சென்றன. அப்போது தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரின் சகோதரர் காரில் இருந்து இறங்கி வந்து, ‘கூட்டத்தை முடிங்கடா.. நேரம் முடிஞ்சிருச்சு’ என தெரிவித்துள்ளார். அதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க-வினர், ‘அதைச் சொல்ல நீயாரு.. நீ என்ன போலீஸா, இல்ல தேர்தல் அதிகாரியா?’ என பதிலுக்குச் சத்தம் போட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் கொதிப்பிலிருந்துள்ளனர்.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பிரசார நிறைவுக் கூட்டம் முடிந்த பின்னர் திசையன்விளை மார்க்கெட் பகுதியில் இரு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தி.மு.க-வைச் சேர்ந்த வாரிசு பிரமுகர் ஒருவர் அங்கிருந்த பெண்களிடம் காட்டமாகப் பேசி கலைந்து செல்ல வற்புறுத்தியிருக்கிறார்.

தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு

அதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க-வினர், அந்த வழியாக வந்த அமைச்சர் கீதாஜீவன் காரில் இருந்த கொடிக் கம்பியை சேதப்படுத்தியுள்ளனர். அதனால் அவரது ஆதரவாளர்கள் சிலர் காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலைவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதன் பின்னரே இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவர் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அது குறித்து விசாரித்த போலீஸார், அ.தி.மு.க- வைச் சேர்ந்த 6 பேர் மீது கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாளை வாக்குப் பதிவு நடக்க இருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uWlstN
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*