விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். ராஜேஸ்வரியின் மகன் ரவி என்ற ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக தற்போதுவரை சிறையில் இருந்து வருகிறார். ரவிச்சந்திரனை நீண்ட கால பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவைக் கொடுத்த ராஜேஸ்வரி அம்மாள், ̀̀"எனக்கு வயசாகிடுச்சு. உடல்நிலையும் சரியில்ல. என்னோட மகனின் அருகாமையை விரும்புகிறேன். முப்பது வருஷமா பிரிஞ்சு இருந்துட்டேன். இனிமேல் இருக்க முடியாதும்மா” என கனிமொழியிடம் உருகினார். “உங்க மகன் சீக்கிரமே உங்ககிட்ட வருவாங்க. கவலைப்படாதீங்கம்மா” என ஆறுதல் சொல்லியிருக்கிறார் கனிமொழி.
இதுகுறித்து ராஜேஸ்வரி அம்மாவிடம் பேசினோம். “என்னோட மகன் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 வருஷமா சிறையில இருக்கிறார். என் மகனுடன் சேர்த்து சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக்கோரி கடந்த 09.09.2018-ல் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு காலதாமதம் செய்து வருகிறார்.
ஆளுநர் காலதாமத்தைச் சுட்டிக்காட்டி, ஆளுநர் முடிவெடுக்கும் வரை இடைக்கால பரோல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கடந்த 10.05.2021-ல் எனது மகன் கடிதம் அனுப்பியிருந்தார். எனது கண் அறுவை சிகிச்சை, ஆளுநரின் தாமதம், சிறையில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி என் மகனுக்கு நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என முதல்வர் மற்றும் சிறைத்துறைக்கு மனு அனுப்பியிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. நடவடிக்கையும் இல்லை. எனக்கு உடல்நிலையும் சரியில்ல. என்னோட வலது கண்ணுல ஆபரேஷன் செய்திருக்கேன். என்னை கவனிப்பதற்கு ஆட்கள் யாரும் இல்லாமல் தனிமையில இருக்கிறேன்.
Also Read: இன்றோடு சிறையில் 30 ஆண்டுகள் நிறைவு செய்த பேரறிவாளன்... மு.க.ஸ்டாலினிடம் மன்றாடும் அற்புதம்மாள்!
என்னை கவனிச்சுக்கவும் ஆறுதல் சொல்லவும் எனது மகனின் அருகாமையை விரும்புகிறேன். கண் அறுவை சிகிச்சையை சுட்டிக்காட்டி, என்னோட மகனுக்கு விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில மனுத்தாக்கல் செய்தேன். வழக்கை விசாரித்த நீதிபதி என் கோரிக்கையை ஆறு வாரத்திற்குள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். என் மகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 30 வருஷமா கீழமை நிதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு, ஆளுநர், குடியரசுத்தலைவர் என பல்வேறு தளங்களில் அலைந்து நீதி வேண்டிப் போராடி உடலாலும், உள்ளத்தாலும் சோர்ந்து போயிருக்கேன். இந்த 30 வருஷத்துல நீதிமன்ற உத்தரவின்படி 6 தடவை மட்டுமே என் மகன் விடுப்பில் வந்துள்ளார். அவரது ஒட்டுமொத்த இளமையும் சிறைக்கம்பிகளின் பின் கழிந்துவிட்டது.
குடும்பத்தின் எந்தவொரு நல்ல தருணத்திலும் அவர் எங்களுடன் இருந்ததில்லை. ஒரு தாயாக இருந்து அவருக்கு நான் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்து வைக்க முடியவில்லை என்ற ஏக்கம் என் கடைசி காலத்தில் என் மனதை அழுத்துகின்றது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், தமிழ்நாடு தண்டனை விதிப்பு நிறுத்தம் விதிகள் 1982 பிரிவு 40-ன் படி, தமிழ்நாடு அரசு தனக்குள்ள அதிகாரத்தின்படி நீண்டவிடுப்பிலோ அல்லது மூன்று மாத விடுப்பிலோ விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க் வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3akrdIj
via
