`அண்ணாத்த' 50வது நாள்: டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ந்த ரஜினி!

0
ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் ஐம்பதாவது நாள் இன்று. இதையொட்டி, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பாராட்டி அவர்களுக்குத் தங்கச் சங்கிலி அணிவித்து மகிழ்ந்திருக்கிறார் ரஜினி.

இந்த வருட தீபாவளிக்கு ரஜினியின் 'அண்ணாத்த' வெளியானது. இப்படத்தில் நடித்ததை எண்ணி எமோஷனலாகவே கனெக்ட் ஆன ரஜினி, சமீபத்தில் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கே சென்று தங்கச் சங்கிலி அணிவித்து மகிழ்ந்துள்ளார். அதன்பிறகு இன்று படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குக் கூப்பிட்டு அவர்களுக்கும் தங்கச்சங்கிலி அணிவித்துள்ளார்.

மனம் திறந்த ரஜினி

இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் மிலன், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சூப்பராயன், ஸ்டில்ஸ் சிற்றரசு, கதாசிரியர் ஆதிநாராயணா, சவுண்ட் இன்ஜினியர் உதயகுமார், கலரிஸ்ட் கே.எஸ்.ராஜசேகரன், கிராபிக்ஸ் டீம் லோர்வின் ஹரிஹர சுதன், உதவி இயக்குநர்கள் ராஜசேகர், திருமலை குமார், சந்துரு செந்தில் ஆகியோருக்குத் தங்கச் சங்கிலி அணிவித்துள்ளார். இந்தப் பாராட்டு நிகழ்வில் தொழில்நுட்ப கலைஞர்களிடம் மனம்திறந்தும் பேசியிருக்கிறார் ரஜினி. இந்தச் சந்திப்பு குறித்து சிலரிடம் பேசியபோது அவர்கள் பகிர்ந்தவை...

"'அண்ணாத்த' வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. உங்க எல்லோருடைய உழைப்பையும் நேர்ல பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நல்ல டீம் இது. கொரோனா காலத்திலும், இக்கட்டான படத்தை சூழலிலும் சொன்ன தேதியில் சிறப்பாகவே முடித்துக் கொடுத்த உங்கள் அனைவரின் சின்ஸியரான உழைப்புக்கு இன்னும் உயரங்கள் கிட்டும். படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் கூட, இது என் மனதுக்கு நெருக்கமான படம். எமோஷனலாகவே கனெக்ட் ஆனேன். ஓடிடியில் வெளியாகி சில வாரங்களாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். கலாநிதிமாறன் பேசும் போதுகூட மகிழ்ச்சியாக படத்தை பத்தி பேசினார். இந்தப் படம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது. தஞ்சை மாதிரி சில ஊர்களில் ஐம்பதாவது நாளை நோக்கி படம் ஓடுவதாக எனக்கு போன் செய்து சந்தோஷப்பட்டார்கள்.

கலகலக்கும் ரஜினி...

இந்த ஐம்பதாவது நாளை மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாட நினைத்தேன். ஆனால், கொரோனா சூழலால் விழா எடுக்க முடியாததால், சிம்பிளாக சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தப் படத்தில் நான் ரொம்பவே அழகாகவும், ஃப்ரெஷ் ஆகவும் இருப்பதாகச் சொன்னார்கள்" எனச் சொல்லி ஒவ்வொருவருக்கும் தங்கச் சங்கிலியை அவர் கைப்படவே அணிவித்து மகிழ்ந்துள்ளார் ரஜினி. இயக்குநர் சிவாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.



from தமிழ் சினிமா https://ift.tt/30W1FQM
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*