சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட குற்றச்சாட்டில் யூடியூபர் மாரிதாஸ் மதுரை மாநகரக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் வசித்துவருகிறார். இவர் தி.மு.க., பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், ஊடகங்களை விமர்சித்துக் கடுமையான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகிறார். இவர் வெளியிட்ட வீடியோக்களும் கருத்துகளும் அரசியல் அரங்கில் பலமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இந்த நிலையில், நாட்டின் முப்படைத் தளபதி நேற்றைய தினம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சூழலில், தமிழக அரசின் சட்டம், ஒழுங்கை அவதூறு செய்யும் வகையில், காஷ்மீருடன் ஒப்பிட்டு மாரிதாஸ் பதிவிட்டிருக்கும் ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மாரிதாஸின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மதுரையைச் சேர்ந்த தி.மு.க வழக்கறிஞர் ராமசுப்ரமணியன், 'தமிழக அரசுமீது அவதூறு பரப்பி பதற்றத்தை உருவாக்க நினைக்கும் மாரிதாஸ்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள்' என்று மதுரை கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையிலும், வேறு சில அவதூறு கருத்துகளை பதிவிட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று மதியம் மதுரை அழகர் கோயில் சாலையிலிருக்கும் மாரிதாஸ் வீட்டுக்கு மாநகர காவல்துறை உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் கைதுசெய்யச் சென்றனர். இந்தத் தகவல் தெரிந்து பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மாரிதாஸ் வீட்டுக்கு முன்பு கூடி கைதுசெய்யக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாரிதாஸை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் சென்றனர்.
Also Read: மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், கிஷோர் கே ஸ்வாமி மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது தி.மு.கவா?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/31Hve94
via
