பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பலி! - நெல்லையில் அதிர்ச்சி

0

நெல்லை டவுனில் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் வளாகத்தின் உள்ளே இருக்கும் கழிவறையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடைவேளை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதன் அருகில் நின்ற மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

இந்த விபத்தில் இரு மாணவர்கள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல் தெரிவிக்கிறது. அத்துடன், மூன்று மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து நடந்ததும் பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன், சக மாணவர்கள் இறந்த ஆத்திரத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைகளை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். பள்ளியில் இருந்த் பூந்தொட்டிகள் வீசி எறியப்பட்டன.

ஆத்திரத்தில் மாணவர்கள்

பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. மாணவர்கள் ஆத்திரத்துடன் கத்தியபடியே வலம் வந்ததால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினார்கள். ஆசிரியர்களாலும் மாணவர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனிடையே சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பெற்றோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர் பதைபதைப்புடன் அங்கும் இங்கும் ஓடினார்கள். தங்கள் குழந்தையைப் பார்த்ததும் சில பெற்றோர் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிப்பதாகத் தகவல் தெரியவந்திருக்கிறது. அவர்களின் பெயர் சஞ்சய், விஸ்வ ரஞ்சன் என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்து நடந்ததற்குப் பள்ளி நிர்வாகம், கட்டடத்தை உரிய முறையாகப் பராமரிக்காததே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த வாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சுவர்கள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. அத்துடன், கட்டடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கியதும் சுவர்கள் இடிந்து விழக் காரணமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சிகிச்சையில் இருந்த ஒரு மாணவர் உயிரிழக்க பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருக்கிறது. சம்பவம் நடந்த பள்ளியில் பதற்றம் நீடிக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3IPQaeG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*