கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் சங்கர் (52). குமார் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பெயர் தீபாவதி (26). கடந்த 6-ம் தேதி இரவு குமார் வீட்டிலிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்து, பிளாக்கில் மது கிடைக்குமா என்றபடி பேச்சுக்கொடுத்து அவரை ரோட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.
அதனால், குமார் அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். பதிலுக்கு அந்த நபரும் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரின் முகம், கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் குமார் சரிந்து விழுந்தார். அதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதையடுத்து, குமாரின் இல்லத்துக்கு முன்பு அக்கம் பக்கத்தினர் கூடி, குமாரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் இறந்து விட்டார். சம்பவம் தொடர்பாக தகவல் பெறப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்த குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
போலீஸார் சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஒன்றை கண்டெடுத்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரை கொலை செய்தவர்கள் குறித்து போலீஸாருக்கு எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில்தான், தன் தந்தையை யாரோ கொலை செய்துவிட்டதாக மீடியாக்களுக்கு உருக்கமாக பேட்டி அளித்தார் அவரின் மூத்த மகள் தீபாவதி.
``என் அப்பா வீட்டுல இருக்கும்போது, யாரோ ஒரு பையன் வந்து கூட்டிக்கிட்டுப் போனான். அதுக்கபிறகு கத்தியால குத்திட்டான். அது யாருன்னே தெரியது" என ஊடகங்களிடம் கதறினார் தீபாவதி. தீபாவதியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரின் மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, கொலை நடந்த அன்று இரவு தீபாவதி ஒரு எண்ணுக்கு அடிக்கடி அழைத்திருப்பதை கண்டறிந்தனர். அது திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த கோபு (19) என்பவரின் எண் எனத் தெரியவந்தது. அதையடுத்து, கோபுவை பிடித்து விசாரித்தபோது குமாரை கொலை செய்ய அவர் மகளே ஏற்பாடு செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அவரைக் கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவல்களின் பேரில் கொலைசெய்யப்பட்ட குமாரின் மகள் தீபாவதியையும் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்த போது, ``இறந்த குமார் சங்கரின் மூத்த மகள் தீபாவதி கருங்கல் பகுதியில் ஒரு கல்லூரியில் எம்.எட் படித்து வருகிறார். அவர் ஆசிரியர் பயிற்சிக்காக குளச்சல் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றபோது, கோபு என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. தீபாவதி திக்கணங்கோடு பகுதியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஆசிரியராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அங்கு கோபுவும் மாணவனாக சென்றிருக்கிறார். தீபா, ஆண் நண்பர்களிடம் அடிக்கடி பேசிவருவது வழக்கமாம். இதை அவர் தந்தை குமார் சங்கர் கண்டித்திருக்கிறார். இதுபற்றி கோபுவிடம் கூறிய தீபாவதி, தன் மீது சந்தேகப்பட்டு தந்தை, மதுபோதையில் அடிப்பதாக சொல்லியிருக்கிறார்.
தந்தையின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என தீபாவதி கூறியிருக்கிறார். இதையடுத்து உணவில் விஷம் வைத்து குமார் சங்கரை கொலைசெய்ய இருவரும் திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு விஷம் எளிதில் கிடைக்கவில்லை. இதையடுத்து கோபு தனக்குத் தெரிந்த திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமுகுந்தன்(21) என்ற இளைஞர் மூலம் கொலையை அரங்கேற்ற முடிவு செய்திருக்கிறார். கொலை செய்ய ஒரு லட்சம் ரூபாய் கூலி கேட்டிருக்கிறார் ஸ்ரீமுகுந்தன். தீபாவதியும், கோபுவும் பேரம் பேசி அறுபதாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறியிருக்கின்றனர்.
அதற்கு சம்மதித்த ஸ்ரீமுகுந்தன் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கிறார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் தீபாவதி. மேலும், கொலைக்கு தீபாவதியும், கோபுவும் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து உடந்தையாக இருந்திருக்கின்றனர். இவர்கள் மூன்றுபேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்" என்றனர்.
ஆண் நண்பரிடம் பேசத் தடையாக இருந்த தந்தையை பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: குமரி: நள்ளிரவில் பாழடைந்த வீட்டில் மின் ஒயர் திருடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lR36au
via
