தஞ்சாவூர் அருகே வல்லத்திலிருக்கும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமையில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டதுடன் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். முன்னதாக பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கும் ஒன்று.
தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்விவரை, மாணவர்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டிலேயே தமிழகத்தில் 51 சதவிகித அளவுக்கு உயர்கல்வி வளர்ந்திருக்கிறது. ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு காமராஜ் அடித்தளம் என்றால்,உயர்கல்வி வளர்ச்சிக்கு கருணாநிதிதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதே பாணியில் தமிழகத்தில் பள்ளி மற்றும் உயர் கல்வி வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார். இரு மொழிக் கொள்கை என்பது புதிதல்ல, அண்ணா காலத்திலிருந்தே தமிழகத்திலுள்ள ஒன்றுதான். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை இருக்க வேண்டும். மூன்றாவது மொழியை மாணவர்கள் படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அது விருப்பப் பாடமாக மட்டுமே இருக்க வேண்டும், கட்டாயப்பாடமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்திருக்கிறோம்.
கல்வித்துறை அதிகாரிகளோடு தமிழக ஆளுநர் கலந்துரையாடிவருகிறார். அது வரும்காலங்களில் மாற வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தமிழக அரசின் கொள்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மனு அளித்திருக்கிறார். வரும்காலங்களில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியவரும்" என்றார்.
Also Read: தேசிய கல்விக் கொள்கை: `வலுக்கிறதா முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி மோதல்?!'
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3dBSPu8
via
