இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இயக்குநர் ராஜமௌலியின் 'RRR' படம் ஜனவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், டிரெய்லரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
இதனிடையே இன்று இப்படத்தின் 'ப்ரீ-ரிலீஸ்' கொண்டாட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிடப் படக்குழுவுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சினிமா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன். இதற்கு ஒரே காரணம், இயக்குநர் ராஜமௌலி மட்டுமே. அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். வந்தவுடனே நான் அவரிடம், இந்தப் படம் 'பாகுபலி 2'வின் சாதனைகள் முறியடிக்கும் என்று சொன்னேன்.
எனக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது இதே ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் நடித்த 'மகதீரா' படம் வெளியானது. படம் தெலுங்கில் பயங்கர ஹிட். அதன் தமிழ் டப் வெர்ஷனான 'மாவீரன்' 2011-ல் வெளியானது. அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்தப் படம் தொடர்பான நிகழ்வில், இயக்குநர் ராஜமௌலி என்னிடம் பேசினார். 'இந்தப் படத்தை உங்கள் நிறுவனமான ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுத்திருக்கிறோம். எனக்கு ஒரேயொரு ஆசை. எனக்கு சென்னை சத்யம் தியேட்டர் மிகவும் பிடித்த திரையரங்கம். அதன் பெரிய ஸ்க்ரீனில் இந்தப் படத்தை நீங்கள் வெளியிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் செய்தோம்.
இந்த 'RRR' படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறது. இப்போது சொல்கிறேன். சத்யம் தியேட்டரில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. அதில் 5 ஸ்க்ரீன்களில் நிச்சயம் 'RRR'தான் வெளியாகும். இந்தப் படத்தின் வெற்றி உறுதி! தென்னிந்திய சினிமாவின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் படம் இருக்கும்" என்று தெரிவித்தார்.
from தமிழ் சினிமா https://ift.tt/3HgQYI4
via Umn news Tamil
