’திரைக்கதைத் திலகம்’ என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல முகங்கள் கொண்ட கே.பாக்யராஜின் பிறந்த நாள் இன்று. பாக்யராஜுடன் பழகிய அனுபவம் குறித்தும் அவரின் பத்திரிகை பணிகள் குறித்தும் ‘பாக்யா’ இதழை சில ஆண்டுகள் கவனித்து வந்த தஞ்சை ரவிராஜிடம் பேசினேன். சில வருடங்களுக்கு முன்னாடி பாக்யா இதழுக்குப் பொறுப்பாசிரியர் தேடிட்டிருக்கார்னு நண்பர் ஒருத்தர் சொன்னார். அதையொட்டி நான் பாக்யராஜ் சாரை சந்தித்துப் பேசினேன். ‘நீங்க ஜெயலலிதா மேடம் கிட்ட செகரட்டரியா இருந்தீங்கனு கேள்விப்பட்டேன், அவங்களைப் பத்தி சுவையா ஒரு தொடர் எழுதுங்களேன்னு' சொன்னார் பாக்யராஜ் சார். ‘அம்மு, அம்மா, அப்பல்லோ’ னு நான் எழுதின அந்தத் தொடர் இருபது வாரங்களூக்கு மேல் வெளியாச்சு.
பாக்யராஜ் சார்கூட பழகின நாட்கள்ல நிறைய விஷயங்கள் என்கிட்டப் பேசியிருக்கார். நான் ஜெயலலிதா மேடம் கிட்ட உதவியாளரா இருந்த சமயத்துலதான் எம்.ஜி.ஆர் மறைந்தார். அப்ப அவரது உடல் இருந்த வண்டியில் ஜெயலலிதா ஏற முற்பட்டபோது தள்ளி விடப்பட்டப்ப பக்கத்துலதான் நான் இருந்தேன். அன்னைக்கு ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த மாதிரி ஒரு நிகழ்வு பாக்யராஜ் சாருக்கும் நிகழ்ந்திருக்கு. இந்த இடத்துல கே.பாக்யராஜ் ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.
ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசா வளர்ந்ததால் அன்னைக்கு அப்படி அவமானப் படுத்தப்பட்டார். பாக்யராஜ் சார் அவரது திரையுலக வாரிசா அறிவிக்கப்பட்ட காரணத்தாலேயே சில கஷ்டங்களைச் சந்திச்சார். உடல் நலன் சரியில்லாம அமெரிக்காவுல எம்.ஜி.ஆர் சிகிச்சை எடுத்திட்டிருந்த சமயம் அது. அவரைப் பார்க்கணும்னு சென்னையில இருந்து கிளம்பி அமெரிக்கா போயிட்டார் பாக்யராஜ். ஆனா அங்க மருத்துவமனையில் இருந்த சிலர் எம்.ஜி.ஆர்கிட்ட இவரை நெருங்கவே விடலை.
மனம் நொந்து போய் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தவர்கிட்ட அந்த ஹோட்டல் ஊழியர்கள், ’சார் எங்க போனீங்க, உங்களைக் கேட்டு எம்.ஜி.ஆர் தரப்புல இருந்து போன் வந்தது. உடனடியா மருத்துவமனைக்குப் போவீங்களாம்’னு சொல்லியிருக்காங்க. அடிச்சுப்புடிச்சுப் போய்ப் பார்த்துட்டார். தன்னைப் பார்க்க வருகை தந்தவர்களின் பதிவை பார்த்த எம்.ஜி.ஆர் பக்கத்துல இருந்தவங்களைக் கடிஞ்சு கொண்டதுடன் உடனடியா பாக்யராஜை வரச் சொல்லியிருக்கார். சினிமாவுல பல பரிமாணங்களைக் கொண்ட பாக்ய்ராஜின் சாதனைகள் இன்றைய தலைமுறைக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இயக்குநரா இருக்கிறப்ப தான் நினைச்சபடி காட்சி வரலைன்னா விட மாட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பை அவர் இயக்கிய படம் ஆக்ரிரஸ்தா. படத்தின் சில காட்சிகளைத் தன் ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு அமிதாப் சொல்ல, அதை ஏத்துக்காம அடம்பிடிச்சு அவரை நடிக்க வச்சார். படம் வெளியானதும் தியேட்டர்களுக்கு விசிட் போய் பார்த்த அமிதாப் அவருடைய ரசிகர்கள் அந்தக் காட்சிகளைக் கொண்டாடினதைக் கண் கூடாப் பார்த்துட்டு, ‘நீங்க சொன்னது உண்மைதான்’னு இவரைக் கட்டிப்புடிச்சு தன் நன்றியைத் தெரிவிச்சதெல்லாம் நடந்தது. அமிதாப்பையே அவர் டைரக்ட் செய்துட்ட பிறகும்கூட இன்னைக்கும் அவருக்கு இயக்குநர்னா அது பாரதிராஜா சார்தான். அவர்கிட்ட இருந்து போன் வந்தா அந்த உரையாடல்ல ஒரு பாசம், நன்றி, குருபக்தி எல்லாமே கண்கூடாத் தெரியும். அப்படிப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்கிறார் ரவிராஜ்.
from தமிழ் சினிமா https://ift.tt/3zw4K6Y
via Umn news Tamil
