உள்ளாட்சி ரேஸ்: முந்தும் திமுக... முட்டி மோதும் அதிமுக; பாஜக நிலை?! - மதுரை மாநகராட்சி கள நிலவரம்

0

மதுரை மாநகராட்சி - 1971 முதல் 2011 வரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலால் தமிழகமே பரபரப்பாகியுள்ள நிலையில், மதுரை மாநகராட்சி தேர்தல் களம் அதைவிட சூடாக தகிக்கிறது.

ஐயாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட உலகிலுள்ள, புரதான நகரங்களில் மதுரையும் ஒன்று. கோயிலில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனே மதுரையை ஆள்வதாக ஆன்மிக மக்கள் நம்புகிறார்கள்.

மீனாட்சியம்மன் கோயில்

மன்னர் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் தமிழ் மொழியை சங்கம் வைத்து வளர்த்து வரும் நகரம். பண்பாட்டு காக்கும் நகரம். தொன்மை, புதுமை, ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம், அன்பு, வம்பு, அரசியல், வணிகம், என அனைத்துக்கும் மையமாக திகழுகின்ற மதுரை, 1971-ல் தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

நகரை ஊடறுத்து வைகை ஆறு செல்வதால், வடகரை, தென்கரை என இரண்டு பக்கமும் நகரம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. 147 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 100 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் 2 -வது மாநகராட்சியாக உருவாகியிருந்தாலும், மதுரை இன்னும் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமை பெறாத மாநகராட்சியாகவே உள்ளது. மதுரையின் புறநகர் பகுதி விரிவடைந்துகொண்டே போனாலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

திமுக பிரசாரம்

மாநகராட்சியின் முதல் மேயராக 1971-ல் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதுரை எஸ். முத்து, 1980 வரை பொறுப்பில் இருந்தார். அதன் பின்பு, அதிமுகவை சேர்ந்த எஸ்.கே.பாலகிருஷ்ணன், பட்டுராஜன் என மேயர்கள் பொறுப்புக்கு வந்தனர். 1984-க்குப் பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகர மேயராக திமுகவை சேர்ந்த குழந்தைவேலு பொறுப்பேற்றார். அவருக்கு அடுத்து சி.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன் என வரிசையாக திமுகவினரே பொறுப்புக்கு வந்த நிலையில், 2011-ல் அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா மேயர் ஆனார். 2016-உடன் அவர் பதவி முடிவடைய அடுத்து தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடப்பட்டது.

மாநகர பிரச்னைகளும் சவால்களும்!

மதுரை மாநகராட்சி பிரச்னைகள் தொடர்பாக மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பேசுகையில், ``20 லட்சம் மக்கள் வாழும் மதுரை மாநகராட்சியின் வார்டுகள் தற்போது சீரமைக்கப்பட்டு 100 வார்டுகளாக்கப்பட்டுள்ளன. இதுவரை பொறுப்புக்கு வந்த மேயர்கள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாதது ஒருபக்கமென்றால் அவர்களுடன் சேர்ந்து, ஆணையாளர்கள், அலுவலர்கள் செய்த முறைகேடுகள் செய்தது இன்னொரு பக்கம். அதனால்தான் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி முழுமையாக பயன்படுத்தாமல், பலரின் தனிப்பட்ட கஜானாவுக்கு சென்று மாநகரம் அரைகுறையாக காட்சியளிக்கிறது.

பாஜக பிரசாரம்

அப்படியே சிறப்பாக செயல்படுகிற ஆணையர்கள் வந்தாலும், ஆளும் கட்சியினர் அவர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி விடுகிறார்கள்.

ஆண்டுக்கு 586 கோடி ரூபாய் வரி வருவாய் வந்தாலும், நிதி பற்றாக்குறையுடன்தான் மாநகராட்சி செயல்படுகிறது. மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை ஊழியர்களின் ஊதியத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை சேர்த்து அதன் மூலம் நகரை அழகுபடுத்தவும், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் மக்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுக்கவும் பல திட்டங்களையும் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் பெரியார் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. 6 தளம் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. பூங்காக்கள், சுற்றுலா வருகிறவர்களை கவரும் வகையில் புதிய கட்டடங்கள், வாகன நிறுத்தம், பூங்காக்கள் என்று அமைத்தாலும் எதுவுமே திருப்திகரமாக இல்லை, எல்லாவற்றிலும் அரைகுறைத் தன்மையுடன் காட்சியளிக்கிறது.

ம.நீ.ம வேட்பாளர்

ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய ஆயிரம் கோடி நிதியில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக மக்கள் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தார்கள்.

அந்த லட்சணத்தில்தான் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்துள்ளது. ஆனால், தற்போது அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

மதுரையின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் விரகனூர் முதல் பரவை வரை வைகைக் கரையோரம் இருபுறம் அமைக்கப்பட்ட சாலைப்பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே இழுத்துக்கொண்டு போகிறது. இன்னும் பல வார்டுகளில் குடிநீர் விநியோகம் என்பது முறைப்படுத்தாமல் உள்ளது. அரசியல்வாதிகள், மாநகராட்சி அலுவலர்களின் பினாமிகள் பெயரில் ஓடும் தண்ணீர் லாரிகள் பயனடையும் வகையில் குடிநீர் விநியோகத்தை சரிபடுத்தாமல் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 24 வார்டுகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தூய்மைப்பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது.

பெரியார் பேருந்து நிலையம்

மதுரை நகருக்குள் அனைத்து சாலைகளும் பல வருடமாக சேதமாகி காட்சியளிக்கிறது. சாலை அமைக்க அரசு 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில் தரமில்லாமல் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக புகார் வந்து கொண்டிருக்கிறது.

வரி நிலுவைகளை வசூலிப்பதில் பிரபல கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், அதிகாரமிக்கவர்களின் வணிக வளாகங்களில் சலுகை காட்டப்படுவதாகவும் சாதாரண மனிதர்களிடம் கறாராக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மதுரையின் முக்கிய பிரச்னை போக்குவரத்து நெருக்கடிதான். மாட்டுத்தாவணியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்ல வாகன ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரம் ஆகும். இதுபோல அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி. முக்கியமாக கோரிப்பாளையம் சிக்னலில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை அப்படியே கிடப்பில் உள்ளது. மெட்ரோ ரயில் கோரிக்கை இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்

சவால்கள் :

மதுரை ஒரு பாரம்பரிய நகரம், கோயில் நகரம், பண்பாட்டு நகரம் என்பதால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு விஷயங்களுக்காக இங்கு வருகிறார்கள். அப்படியுள்ள நிலையில் மதுரையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது முக்கியமானது.

விமான நிலையத்திலிருந்து மதுரை நகருக்குள் வருகின்ற அவனியாபுரம், வில்லாபுரம் சாலை நெரிசலாகவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியுடனும் உள்ளது. அதுபோல் கோரிப்பாளையம், சிம்மக்கல், கீழவாசல், நெல்பேட்டை, முனிச்சாலை சந்திப்பு, பீபி குளம், ஆத்திகுளம், நரிமேடு, மாட்டுத்தாவணி, தெப்பக்குளம் பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் தினமும் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் மெட்ரோ ரயிலை விரைந்து கொண்டு வரவேண்டும். மதுரை மாநகரில் நெருக்கடியை குறைக்க கூடல் நகர் ரயில் நிலையத்தை மற்றொரு ரயில் முனையமாக செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து அலுவலகங்களும் எளிதில் அணுகும் விதமாக அனைத்து மக்களுக்கும் இன்னும் நெருக்கமாக கொண்டு வரவேண்டும்.

அதிமுக தேர்தல் பிரசாரம்

லாரி செட்டுகள், வெங்காய மார்க்கெட், கரிமேடு மீன் மார்க்கெட், இரும்புக்கம்பி, தகர விற்பனை கடைகளை மாட்டுத்தாவணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது... இவைகளை தீர்க்க கூடியவர்களே மக்களின் சாய்ஸாக இருப்பார்கள். ஆனால், இது நடக்காமலும் போகலாம்.

திமுக:

பிரதான கட்சிகளான திமுக - அதிமுகவில் போட்டியிடுவோரில் மேயர் வேட்பாளர்கள் என சொல்லப்படுவர்கள் ஒரு சிலர்தான். காரணம் பெரிய அளவில் வாரிசுகளை இரண்டு கட்சிகளிலும் நிறுத்தவில்லை.

திமுக வேட்பாளர் ஹரினி

திமுக அதிகமான இடங்கள் வெற்றி பெற்றால், வடக்கு மாநகர மாவட்ட பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேதுவின் மனைவி விஜய மௌசிமிதான் மேயர் வேட்பாளர் என்கிறார்கள். இவரை வெற்றி பெற வைக்க பொன் முத்துராமலிங்கம் 85 வயதிலும் கடுமையாக உழைக்கிறாராம். அவரை ஆதரிக்கும் வகையிலேயே மற்ற வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள்.

அதே நேரம், உதயநிதி, அன்பில் மகேஷ், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என முக்கிய புள்ளிகள் மூலம் மேயராகி விடலாம் என்ற நம்பிக்கையில் சிலர் காய் நகர்த்தி வருகிறார்கள். அதில் தங்கம் தென்னரசுவின் ஆதரவு பெற்ற ரோகினி பொம்மதேவன், உதயநிதி, அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவு பெற்ற முன்னாள் கவுன்சிலர் சசிகுமாரின் மனைவி வாசுகி, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு பெற்ற இந்திராணி பொன் வசந்த், மிசா பாண்டியனின் மனைவி ஆகியோரும் மேயர் ரேஸில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் விஜய மௌசிமி

அதே போல் துணை மேயர் பதவிக்கு ஆரப்பாளையம் ஜெயராமன், எஸ்ஸார் கோபி தம்பி போஸ் முத்தையா, வி.கே. குருசாமி உறவினர் முகேஷ் ஷர்மா உள்ளிட்ட சிலர் காய் நகர்த்தி வருகிறார்களாம்.

அதிமுக:

அதிமுகவில் முன்னாள் மண்டலத்தலைவர் சண்முகவள்ளி ரேஸில் முதல் இடத்தில் உள்ளார். இவர் செல்லூர் ராஜுவின் தீவிரமான ஆதரவாளர். அடுத்த இடத்தில் முன்னாள் கவுன்சிலர் சுகந்தி அசோக், ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் சண்முகப்ரியா ஹோசிமின் ஆகியோருக்கு வாய்ப்பு அமையும் என்கிறார்கள்.

திமுக வேட்பாளர் வாசுகி

துணை மேயர் பதவிக்கு செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் சோலை ராஜா, ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் ஜெயவேல், ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் சாலை முத்துவுக்கு வாய்ப்பு அமையும் என்கிறார்கள்.

80- க்கும் மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டாலும் பாஜக 5 இடங்களில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என மாநகர தலைவர் டாக்டர் சரவணன் கடுமையாக வேலை பார்க்கிறார். ஆனால், கூட்டணி பலம் இல்லாததால் அது மைனாஸாகவே தெரிகிறது. அது தெரிந்ததாலோ, என்னவோ, பாஜகவில் மேயர் கனவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தமுறை சீட் கேட்ககூட இல்லையாம். இதுவே போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா

அதுபோலத்தான் நாம் தமிழர், தேமுதிக, அமமுக, மநீம,பா.ம.க, ச.ம.க, எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளின் நிலைமை.

இதில் அழகிரி ஆதரவாளர்களான முபாராக் மந்திரி தன் மனைவியை 47-வது வார்டிலும், இசக்கிமுத்து தன் மனைவியை 14-வது வார்டிலும் சுயேச்சையாக நிறுத்தியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்கட்சி பிரச்னைகள், உள்குத்துகள் அனைத்து கட்சியிலும் இருந்தாலும், வைட்டமின் `ப’ கணக்கும் பார்க்கப்படுகிறது.

இதில் திமுகவும், அதிமுகவும் வார்டுகளில் வைட்டமின்களை இறக்க தொடங்கிவிட்டனவாம். பிரசார வேகம், ஆளும் கட்சி என்ற பிளஸ் என எப்படியும் 70 சதவிகித இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என்பதே தற்போதைய கள நிலவரமாக இருக்கிறதாம். தேர்தல் நெருங்க நெருங்க, வைட்டமின்களாலும், பிரசார வியூகத்தினாலும் இதில் சில மாற்றங்கள் இருக்கலாம்!

மதுரை மாநகராட்சி

100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிமுக 20 வார்டுகள் வரையிலும், பாஜக 3 வார்டுகள் வரையிலும் முன்னிலையில் வர வாய்ப்பு இருக்கிறது. சுயேச்சைகள் சில இடங்களிலும் வர வாய்ப்புள்ளது. ஆனால், இறுதியில் அனைத்தையும் வைட்டமின்கள் மாற்றிவிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/7wvp98c
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*