`உதயநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்!’ -தஞ்சாவூரில் பொன்.ராதாகிருஷ்ணன்

0

``உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் பிரசாரம் செய்த போது தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை மறந்து நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூய்மை பணியில் ஈடுப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 27 வார்டில் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக வருகை தந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலில் வார்டு 51-ல் போட்டியிடும் விக்னேஷ்குமார் ராஜா என்பவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதில் நனைந்து விடாமல் இருக்க அவருக்கு கட்சி நிர்வாகி ஒருவர் குடை பிடித்து கொண்டிருக்க பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசியதுடன் அதனை தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ``இது சவால் நிறைந்த தேர்தல். செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆர்வமாகக் கூடி வருவதுடன் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முனைப்புடன் உள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்தத் தேர்தலை சந்தித்து வருகிறது.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வெகுமதி உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். தஞ்சாவூர் மாநகரில் பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்றது. ஆனால் அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால், பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

வாக்கு சேகரிப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

அதன் பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும். தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Sxs7WCO
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*