தி.மு.க மகளிரணி மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறியதால் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மீனா கோவை ராமநாதபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார்.
`ஆலம் விழுதுகள்' என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இவர் கணவர் ஜெயக்குமார், அமைச்சர் எ.வ. வேலுவுக்கு நெருக்கமானவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவுக்கு மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பிறகு கனிமொழியுடனும் நெருங்கிப் பழக தொடங்கினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், தெற்கு தொகுதி கூட்டணிக்கு சென்றுவிட்டதால் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைமையில் இருந்து சிலர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால், தி.மு.க ஆட்சியைப் பிடித்தவுடனேயே அவர் 57-வது வார்டில் களப்பணியாற்றி வந்தார். பகுதி பொறுப்பாளர் எஸ்.எம் சாமி, `இவர்தான் கோவை மேயர்’ என்று வெளிப்படையாக கூறினார். தலைமை அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகம் திறந்தார்.
மாவட்டப் பொறுப்பாளரான கார்த்தி தன் மனைவி, லக்குமி இளஞ்செல்வியை மேயராக்கக் காய் நகர்த்தி வந்தார். கார்த்தியும் அதேப் பகுதியை சேர்ந்தவர்தான். சொந்த மாவட்டத்தில் இருந்து தனக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று மீனா ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்கவிடாமல் கார்த்தி தடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு நடந்த செயற்குழு கூட்டத்தில், மீனா ஜெயக்குமார் கார்த்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், மீனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க தலைமை.
இது மீனா ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. `தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, புகார் கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பு வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க-வினர் கூறுகையில், ``மீனா ஜெயக்குமார் புகார் கூறியதை யாரும் தவறு என சொல்லவில்லை.
எல்லோரும் இருக்கும் பொதுக்கூட்டத்தில் ஒருமையில் சொல்லி பேசியதுதான் பிரச்னை. மேலும், சாதி குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அ.தி.மு.க ஐ.டி விங் இதை பொதுவெளியில் பரப்பினார்கள். தவிர, தனக்கு சீட் கிடைக்காததால் மீனா தேர்தல் பணியும் செய்யவில்லை.
மீனா மட்டுமல்ல, அன்னூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் எம்.எல்.ஏ-வையே சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் கட்டுப்பாடை மீறிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இது வெறும் ஆரம்பம் தான். இனி அடுத்தடுத்து பல அதிரடிகள் அரங்கேறும்" என்று சஸ்பென்ஸ் உடன் பேச்சை முடித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/OmrMIA1
via
