நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றனர். கோவை மாநகராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, பதவியேற்கும்போது பதற்றத்தில் ஆணையர் கூறிய உறுதி மொழியை சரியாக உச்சரிக்க முடியாமல் போனது.
அந்த வைரல் வீடியோவை பலரும் பார்த்திருப்பார்கள். பகிரவும் செய்திருப்பார்கள். சிலர் அதை கிண்டல் செய்ததையும் பார்த்தோம். `அவரது பின்னணி தெரியாமல், அவரது மேடைப் பதற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர் பேசுவதை வைத்து அவரை எடை போடலாமா? கவுன்சிலராக அவரின் செயலைத்தான் விமர்சிக்க நமக்கு உரிமை உள்ளது' உள்ளிட்ட எதிர்வினைகளும் வந்தன. இந்நிலையில், சரஸ்வதியின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி சரஸ்வதி. பெரியசாமி, போர் போடும் இயந்திரத்துக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தி.மு.க மாநகர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் மருத்துவர், மகன் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலைசெய்கிறார்.
சரஸ்வதி பெரிதாகப் படிக்கவில்லை. வெளி உலகப் பழக்கவழக்கம் குறைவு. அது பெண்கள் வார்டு என்பதால் பெரியசாமி, தன் மனைவியை போட்டியிட வைத்தார். சரஸ்வதிக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தோம்.
``அக்கம், பக்கத்தினருடன் நெருங்கிப் பழகுவார். நன்கு பேசுவார். ஆனால் ஊடகங்கள், மேடை, மைக் எல்லாம் அவருக்குப் புதிது. பிரசாரத்தின்போதே அவர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டார். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கின்றனர். கவுன்சிலர் பதவியை, அவர்கள் வருமானத்துக்கானதாகப் பார்க்கவில்லை.
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றுதான் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். ஆனால், வீடியோ வைரலான சம்பவத்தால் அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள்” என்றனர். சரஸ்வதியிடம் பேச நாம் பலமுறை முயன்றோம். ஆனால், அவர் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.
சரஸ்வதி கூறியதாக அவர் உறவினர்கள் நம்மிடம் கூறியது: ``மேடையில் முதல் முறை பேசியதால் பதற்றத்தில் அப்படி ஆகிவிட்டது. போக போக நான் பழகிவிடுவேன். இதைப் பற்றி இதற்கு மேல் பேச விருப்பமில்லை.”
சரஸ்வதி மட்டுமல்ல, கோவை மாநகராட்சியிலும் மற்ற இடங்களிலும், ஆண்கள் உட்பட பதவியேற்ற பல கவுன்சிலர் பதற்றத்தில் சற்று தடுமாறவே செய்தனர். கோவை மாநகராட்சி மேயராக பதவியேற்ற கல்பனாகூட, தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் தடுமாறினார்.பொதுவாழ்க்கையில் பெரிதாக பழக்கமில்லாதவர்களுக்கு இந்தத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான்.
காலம் காலமாக அரசியலில் கோலோச்சிய ஆளுமைகள் கூட மேடையில் உளறிய சம்பவங்கள் ஏராளம். பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே நல்ல மக்கள் தலைவர்கள் என்பதில்லை.
குடும்பம், வீடு என்று இருக்கும் நம் பெண்களில் பெரும்பாலானவர்கள், பொதுவெளிப் பழக்கம் இல்லாதவர்கள். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டதன் முலம், அவர்களில் பல பெண்கள் தேர்தல் களத்துக்கு வந்தது ஆரோக்கியமான, முக்கியமான மாற்றம். வீட்டில் அடைந்து கிடந்தவர்கள், மக்கள் பணியாற்ற வந்துள்ளதை வரவேற்போம்!
கவுன்சிலர் பணி சிறக்க சரஸ்வதிக்கு வாழ்த்துகள்!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/UAFOq1v
via
