கடன் ஆப்களால் ஏற்படும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவசர பயன்பாட்டுக்காக பலரும், கடன் ஆப்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் கூடுதல் வட்டி போட்டு, அதை வசூலிக்க மிக மோசமாகவும், தரக்குறைவான யுத்தியை கடன் ஆப் நிறுவனங்கள் கையாள்கின்றன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்மார்ட் லோன் என்கிற ஆப்பில் கடன் வாங்கியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டவே, அந்தப் பெண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் ஏத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர் தனது சகோதரர்களுடன் கோவை கணபதி பகுதியில் தங்கி, ஓர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆப் மூலம் ரூ.12,108 கடன் வாங்கியிருந்தார். கடன் தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால், அந்த கடன் ஆப் நிறுவனத்திலிருந்து, பாரதிராஜாவை அழைத்து தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் அவரின் போட்டோவை ஆபாசமாக மார்ஃப் செய்து, அதை அவரின் கான்டாக்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாரதிராஜா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தாற்கொலை செய்து கொண்டார். சகோதரர் வீட்டுக்கு வந்தபோது, பாரதிராஜா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
“தன் சாவுக்கு, கடன் ஆப் நிறுவனத்தின் ஊழியர்கள்தான் காரணம்.” என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/QlNYcOX
via
