புதுக்கோட்டை மாவட்டம் கவரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டுவதாக விராலிமலை போலீஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், சங்கரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத விராலிமலை காவலர்கள், மாறாக சங்கரையே அடித்து உதைத்திருக்கின்றனர். இதுகுறித்து சங்கரின் தாயார், வக்கீல் பழனியப்பன் உதவியுடன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனின் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய காவலர்கள் பிரபு, செந்தில், அசோக்குமார் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளியைக் காவலர்கள் தாக்கிய போது, காவல் நிலையத்தில் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் பத்மா, அதனைத் தடுக்காமல் சங்கரை, "நீ என்ன காந்தியா..." என்று ஒருமையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐ.ஜி இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது, விராலிமலை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பத்மாவைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
விராலிமலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி போலீஸாரால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்ஸ்பெக்டர் பத்மாவும் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/mVD4uSH
via
