கோவை மாவட்டம் சூலூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “காலங்கள் கூட கூட பெரியார் மீது மக்களுக்கு மரியாதையும் கூடுகிறது. விமர்சனமும் கூடவே வருகிறது.
தந்தை பெரியார் கடவுள் மறுப்பைப் பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில், அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக அமர மறுத்தவர் பெரியார்.
காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சி பெரியவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர் பெரியார். பிறர் உணர்வுகளை மதிப்பவர். இப்போது, அந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
சிறுவர்கள் பெரியார் படம் மீது சிறுநீர் கழிக்கின்றனர். செருப்பால் அடிக்கின்றனர். அவர் என்ன பாவம் பண்ணார். இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைத்து விடப்போகிறது.
யார் சொல்லி அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், இதையெல்லாம் பார்த்தால் பெரியார் சந்தோஷப்பட்டிருப்பார். ஆதிக்க சக்திகளைத்தான் அவர் வெறுத்தார். அவர் பிராமணீயத்தைத் தான் வெறுத்தார். பிராமணர்களை வெறுக்கவில்லை.
தற்போது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஆசிரியர்கள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என்று அனைத்துத் துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு பெரியார் போட்ட விதை ஒன்றே தான் காரணம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/mlUqowO
via
