செல்போன் விளையாட்டால் விபரீதம்: மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட சிறுவன் - அதிர்ச்சியில் பெற்றோர்

0

செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால் மாணவர்களும் செல்போனுக்கு பழக்கமாகி விட்டார்கள். இப்போது ரெகுலர் வகுப்புகள் நடக்கத் தொடங்கிவிட்ட போதிலும் மாணவர்கள் பலரும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி செல்போனுடனேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.

சிகிச்சை பெறும் சிறுவன்

பப்ஜி மற்றும் ஃபிரி ஃபயர் போன்ற செல்போன் கேம்ஸ் தடை செய்யப்பட்டபோதிலும், அந்த விளையாட்டுகள் வேறு பெயர்களில் இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மாணவர்கள் பலரும் செல்போனில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகிப் போயிருக்கிறார்கள்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி 17 வயது மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அந்த மாணவன் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதால் மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது. நெல்லைக்கு அருகில் சிறிய நகரத்தைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டிக் டாக், PUBG

அந்த சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் மயக்க நிலையில் இருந்த போதிலும் கைகள் அனிச்சையாகத் துப்பாக்கியால் சுடுவது போல அமைதியற்ற நிலையில் இருந்துள்ளான். அதை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிற நோயாளிகளின் உறவினர் யாரோ செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு விட்டார். அந்த வீடியோ அதிர்ச்சிகரமாக பரவத் தொடங்கியது.

சிறுவனின் வீடியோ பற்றிக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நள்ளிரவில் யாருக்கும் தெரிவிக்காமல் சிறுவனை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.

இது குறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தினரிடம் பேசியபோது, ”சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைப் படம் பிடிப்பது தவறான செயல். அதுவும் சிறுவனுக்கு மனநலப் பிரச்னை இருப்பதைப் படம் பிடித்து வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம். அந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

சிறுவனின் சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு மருத்துவர்களிடம் பேசியபோது, “கொரோனா காலத்துக்குப் பிறகு சிறுவர்களிடம் செல்போன் புழக்கம் அதிகரித்து விட்டது. அதனால் தங்கள் குழந்தைகள் செல்போனை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

ஆன்லைன் கேம்ஸ் பாதிப்புக்கு உள்ளான சிறுவன்

தொடர்ச்சியாக சிறுவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் மூளையிலும் பாதிப்பை ஏறடுத்திவிடும். அந்த சிறுவனுக்கு நரம்பியல் மற்றும் மனநல மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாகவே மருத்துவமனையில் இருந்து பெற்றோர் அழைத்துச் சென்று விட்டார்கள்.

செல்போன் கேம்ஸ் தொடர்ச்சியாக விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pOA9mxh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*