திடீர் நெஞ்சுவலி... 54 பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட ஓட்டுநர் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

0

திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டு, சாத்தான்குளம் பேருந்து நிலையத்திற்கு மதியம் 12:40 மணியளவில் வந்து சேர்ந்தது. இந்தப் பேருந்தை 59 வயதான முருகேசபாண்டியன் ஓட்டி வந்தார். இவரை, பயணிகள் ’மீசை முருகன்’ எனச் செல்லமாக அழைப்பார்கள். அந்தப் பேருந்தில் 54 பயணிகள் பயணம் செய்தனர். சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநர் முருகேசபாண்டியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்தினை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் பேருந்தினை மெது மெதுவாக இயக்கி சாத்தான்குளம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தியுள்ளார்.

முருகேசபாண்டியன்

பின்னர், பேருந்திலிருந்து சற்று தள்ளாடியபடி நடந்த முருகேச பாண்டியன், பேருந்து நிலையத்திற்குள் நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்தார். அதைக் கண்டு பதறிப்போன நடத்துநர், நேரக்காப்பாளர் ஆகியோர் முருகேச பாண்டியனை, ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

``திருநெல்வேலியில இருந்து பஸ் கிளம்பினப்போ அண்ணன் வழக்கபோல உற்சாகமாகத்தான் இருந்தார். ஆனா, கருங்கடல் கிராமத்துப் பக்கம் வந்தப்போ பஸ்ஸின் வேகம் குறைஞ்சுது. வேகத்தை குறைச்சும் கூட்டியும் ஓட்டினார். டிக்கெட் கொடுத்துக்கிட்டிருந்த நான், அவரு பக்கத்துல போயி என்னாச்சுண்ணே வண்டி ஏதும் ரிப்பேரான்னு கேட்டேன். அதுக்கு, ‘இல்லப்பா எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு’ண்ணு சொன்னார். வண்டிய ஓரமா நிப்பாட்டுங்கண்ணேன்னு சொன்னேன். அவரும் ஓரமா நிறுத்தினார். உடனே ஆஸ்பத்திரிக்குப் போவும்ணேன்னு சொன்னேன். ‘நம்மள நம்பி பஸ்ஸுல 54 பேரு ஏறியிருக்காங்க.

சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுனர்

எல்லாருக்குமே வேலைகள் இருக்கு. இப்போ வலி கொஞ்சம் பரவாயில்ல. சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போயிடலாம்’னு சொல்லி பஸ்ஸை மெது மெதுவா ஓட்டி ஒரு வழியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸை விட்டு இறங்கியும் தள்ளாடித்தான் நடந்தார். உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். ஆனா, கொஞ்ச நேரத்துலயே அண்ணன் இறந்துட்டார். அவரை மீசை முருகன்னுதான் எல்லாருமே கூப்பிடுவாங்க. பேருக்குத்தான் மீசை வச்சிருக்கார். ஆனா, யாரிடமும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார். பயணிகளை பத்திரமா பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்ட அவரு, இப்போ எங்களை விட்டே போயிட்டார்” என்றார் அந்தப் பேருந்தின் நடத்துநர் கண்ணீருடன்.

மீசை முருகன் உயிரிழந்த செய்தி அறிந்து ஓட்டநர்கள், நடத்துநர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/QgOrj1q
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*