வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது 22 வயதாகும் மகன் வசந்தகுமார். இவர், கானா பாடல்களை தானே எழுதி, அதற்கேற்ற வீடியோவை தயாரித்து யூ-டியூப்பில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடிய வசந்தகுமார், நேற்று மாலை மேல்ஆலத்தூர் ரயில் நிறுத்தம் அருகில் கானா பாடலுக்கான ஆல்பம் எடுக்கச் சென்றார். அப்போது அவர் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரம் பார்த்து, திடீரென வந்த ரயிலில் சிக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து, கதறி அழுதனர். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே இளைஞர் உயிரிழந்த சம்பவம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/gCIukvo
via
