திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஓர் வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இரண்டு சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, மூன்று பேரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஓர் வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார்.
முத்துமாரியுடன் அவர் மகன்கள் தர்ணீஷ், நித்தீஷ் ஆகியோரும் அந்த வீட்டில் இருந்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி வந்துசெல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது. நேற்றும் அந்த நபர் முத்துமாரி வீட்டிக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த நபர் மட்டும் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். எந்த சத்தமும் வராததால் அக்கம்பக்கத்தினர் முத்துமாரி வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கின்றனர்.
அப்போதுதான் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஏற்கெனவே திருமணமான முத்துமாரி, கணவனைப் பிரிந்து அந்த நபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல் ஆணையர் பாபு விசாரணை செய்தார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Sjkzag0
via
