`திருந்தி வாழ முடிவெடுத்த ரௌடி; பயத்தில் தலை துண்டித்துக் கொலை செய்த கும்பல்!' - என்ன நடந்தது?

0

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் தமிழ்நாடு மாநில பனை வாரிய அலுவலகமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கி வந்த பழைய கட்டடம் ஒன்று உள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடம், கடந்த சில ஆண்டுகளாகாவே எந்த விதப் பராமரிப்பும் இல்லாமல், பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான ’சிங்கம்’ திரைப்படத்தில் இந்தக் கட்டடம், காவல் நிலையமாக காட்சிப்படுத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பிரபு

இந்தத் திரைப்படத்திற்கென காவல் நிலையம் போல வடிவமைக்கப்பட்டது. சிங்கம் படப்பிடிப்பால் இந்தக் கட்டடம் மாநகரில் பிரபலமானது. படப்பிடிப்பு முடிந்தும்கூட உள்ளூர் மக்கள் இந்தக் கட்டடத்தை ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தனர். அதன் பின்னர் இந்தக் கட்டடம் மீண்டும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையிலும், கட்டடத்தின் வளாகத்தில் புற்கள், செடிக்கொடிகள் முளைத்து புதர் மண்டியும் காட்சி அளிக்கிறது. அந்தப் பகுதிக்குள் அந்நியர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில், அந்த கட்டடத்துக்கு மேலே ஏராளமான காக்கைகள் கூட்டமாக கூடியும், சத்தம் எழுப்பியும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அத்துடன் ஒருவித துர்நாற்றமும் வீசியது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து, அந்த கட்டடத்திற்குள் போலீஸார், ஆய்வு செய்தனர். கட்டடத்தின் வளாகத்திலும், கீழ் தளத்திலும் ஒன்றுமில்லாத நிலையில் மேல் தளத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு முதல் இரண்டு அறைகளுக்கு அடுத்ததாக உள்ள திறந்த வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கொலை நடந்த கட்டடம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரடியாக வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இரண்டு நாள்களுக்கு முன்பே கொலை செய்யபட்டிருக்கலாம் என்றனர் போலீஸார். அந்தப் பகுதியில் உள்ள சில கடைகளின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கொண்டு கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

``கொலை செய்யப்பட்ட பிரபுவுடன், எங்களோட நண்பர்களான செல்வசதீஷ், இசக்கிராஜா, அருண் என்ற ஜெயக்குமார், வசந்த் ஆகிய அஞ்சு பேரும் ஒன்னா சேர்ந்து அந்தக் கட்டடத்தின் மாடியில வச்சு சரக்கடிச்சோம். பிரபு, ‘இனிமேல் நான் தப்பு செய்ய மாட்டேன். திருந்தி வாழப்போறேன்’னு சொன்னார். பிரபுகூட சேர்ந்து நாங்க திருட்டு, கஞ்சா கடத்தல், கொலை முயற்சி செஞ்சுருக்கோம். எங்க மேல நிறைய கேஸ் இருக்கு. பிரபு திருந்தி வாழப்போறேன்னு சொன்னதுனால, போலீஸ்ல எங்களைக் காட்டிக் கொடுத்திடுவார்னு எங்களுக்கு பயம் வந்துச்சு. நாங்க எல்லாருமே சொல்லியும் பிரபு கேட்கலை. எங்களுக்குள்ள வாக்குவாதம் அதிகமாச்சு. அதனால கோவத்துல பிரபுவோட தலையை வெட்டினோம். அதுக்குப்பிறகு அங்க இருந்து தப்பிச்சிடோம்” என்று அந்த சிறுவன் கூறியிருக்கிறார்.

கைது

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``கொலை செய்யப்பட்ட பிரபு மீது பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, அடிதடின்னு பல வழக்குகள் நிலுவையில இருக்கு. மூணு வருஷத்துகு முன்னால அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுனால அவரது மனைவி, குழந்தைகளைக்கூட்டிட்டு வீட்டை விட்டுப் போயிட்டார். அவரோட அக்கா வீட்டுலதான் தங்கி இருந்திருக்கிறார். செல்வசதீஷ் மீது கொலை, திருட்டு வழக்கு இருக்கு. 17 வயது சிறுவனை பிடித்து, கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பியிருக்கோம். தலைமறைவா உள்ள 4 பேரை தேடிட்டு இருக்கோம்” என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/bSBfKcA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*