சென்னை : பாஜகவினர் தேசிய மாடல் எனவும், திமுகவினர் திராவிட மாடல் எனவும் சமூக வலைதளங்களிலும், மேடைகளில் முழங்கி வரும் நிலையில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆத்திச்சூடியை வைத்து கொடுத்துள்ள விளக்கம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
கடந்தாண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து திராவிடம் என்ற சொல்லாடல், அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திமுகவினர், குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைகளில் பேசும் போதெல்லாம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருவதாகக் கூறுகிறார்.

இதேபோல திமுக மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் வரை திராவிட மாடல் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகப் படுத்தி வருகின்றனர். திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது... உருவாக்கும்; எதையும் சிதைக்காது... சீர்செய்யும்; யாரையும் பிரிக்காது... அனைவரையும் ஒன்று சேர்க்கும்; யாரையும் தாழ்த்தாது... அனைவரையும் சமமாக நடத்தும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கத்தையும் அளித்தார்.
மேலும் அம்பேத்கர் கனவை நனவாக்குவது, சமூக நீதி ஆகியவற்றை வழங்குவது தான் திராவிட மாடல் என திமுகவினர் கூறி வருகின்றனர். அதற்கு இணையாக தேசிய மாடல் என பாஜகவினரும், பாட்டாளி மாடல் என பாமகவினரும் போட்டியாக கூறி வருகின்றனர். திராவிட மாடல் என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார். திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியது தான். திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026-ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுதான் பாட்டாளி மாடல் என பாமகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவினர் தேசிய மாடல் எனவும், திமுகவினர் திராவிட மாடல் எனவும் சமூக வலைதளங்களிலும், மேடைகளில் முழங்கி வரும் நிலையில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆத்திச்சூடியை வைத்து கொடுத்துள்ள விளக்கம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான எச்.ராஜா, ' தேசிய மாடல் 'ஊக்கமது' கைவிடேல். திராவிட மாடல் - 'ஊக்க மது' கைவிடேல்.' என பதிவிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் மது விற்பனை அதிகமாக நடைபெறுவதைக் குறிப்பிட்டு தான் எச்.ராஜா அவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
