இந்தியாவில் குழந்தை திருமணங்கள் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலைச் சுற்றி, சுமார் 300 தீட்சிதர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுவாக தீட்சிதர்கள் சிலர், தங்களது குழந்தைகளுக்கு உரிய வயது எட்டும் முன்பே திருமணம் செய்து வைப்பதாக, தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், சிதம்பரத்தில் தற்போது ஒரு குழந்தைத் திருமணம் நடந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள தீட்சிதர் ஒருவரின் மகனுக்கும் , தீட்சிதரின் மகள் 17 வயதான சிறுமி ஒருவருக்கும், சமீபத்தில் ஒரு பாடசாலையில் திருமணம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, திருமண மண்டபம் ஒன்றில் விருந்தோம்பல் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த குழந்தைத் திருமணம் குறித்து, கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு , சிதம்பரத்திற்கு வந்த கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, சிறுமியின் வீட்டுக்குச் சென்று, திருமணம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். இதில், அந்த சிறுமிக்கு 17 வயது என்பதும், அவருக்கு திருமணம் நடந்ததும் உறுதியானது. அதையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பதாக சிதம்பரம் காவல் நிலையத்தில், சித்ரா புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மணமகன், அவரது தந்தை, மணமகளின் தந்தை மற்றும் திருமணம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்த தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல அந்த பாடசாலை நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/p4luaWt
via
