கோவை காந்திபுரம் பகுதியில் மருத்துவர் ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமாக எலன் மருத்துவமனை இயங்கி வந்தது. இதனிடையே, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.15 லட்சம் வாடகை மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் அடிப்படையில் 2027ம் ஆண்டு வரை வாடகைக்கு விட்டார்.
எலன் மருத்துவமனை தற்போது சென்னை மருத்துவமனை என்கிற பெயரில் இயங்கி வருகிறது.
கொரோனா முதல் அலை காலகட்டத்தில் ராமசந்திரன் மற்றும் உமா சங்கர் இடையே பிரச்னை வெடித்ததாக சொல்லப்படுகிறது. உமாசங்கர் வாடகை தொகையை செலுத்தாமல், மருத்துவமனையை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விட முயற்சித்து தனக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்துவதாக ராமசந்திரன் கோவை போலீஸில் புகார் அளித்தார்.
அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, வாடகை கேட்டதால் உமாசங்கர் ரெளடிகளை வைத்து மருத்துவமனையை சேதப்படுத்தியதாக ராமசந்திரன் காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.
அதனடிப்படையில் உமாசங்கர், அவர் மேலாளர் மருதவாணன் உள்ளிட்டோரை போலீஸ் கைது செய்தது. பிறகு ஜாமீனில் வெளிவந்த உமாசங்கர் ரத்தினபுரி காவல்நியைத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார். கடந்தாண்டு கையெழுத்திட நடந்து வந்துகொண்டிருக்கும்போது, உமாசங்கர் கார் மோதி உயிரிழந்தார்.
அந்த மரணத்தில் ஏராளமான மர்மங்கள் எழுந்தன. “ராமசந்திரன் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மருத்துவமனையை எங்களிடம் இருந்து அபகரிக்க அரசியல் மற்றும் காவல்துறையுடன் இப்படி செய்கின்றனர்.” என்று உமாசங்கர் தரப்பில் கூறப்பட்டது.
முக்கியமாக, அப்போது ஆளும்கட்சியாக இருந்த அமைச்சர் ஒருவரின் சகோதரர் கண் அசைவில் இந்த வழக்கு நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஆட்சி மாறியதும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் மருத்துவமனையை கைப்பற்ற ராமசந்திரன் ஆள்களை வைத்து மருத்துவமனையை தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர் ராமசந்திரன், காமராஜ், முருகேஷ், பழனிசாமி, மூர்த்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் இந்த வழக்கில் தவறுக்கு உடந்தையாக இருந்த அரசியல் மற்றும் காவல்துறை புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/iPc1sCn
via
