ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் கஞ்சா கடத்திவருவதை தடுக்கும் விதமாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத்தில் சோதனை நடத்தியபோது, பேருந்தில் வந்த நபர் ஒருவர், ஜன்னல் வழியாக ஏதோ பொட்டங்களை வெளியில் தூக்கி வீசினார். அதைக்கண்ட போலீஸார், கஞ்சா பொட்டலங்கள் என நினைத்து, அதனை கைப்பற்றிச் சோதனை செய்தனர். அதில், ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் இருந்ததைக் கண்டு, பேருந்தில் இருந்த பயணியைப் பிடித்து விசாரணைக்குஉட்படுத்தினர். அவர் காட்பாடி அருகேயுள்ள வடுகந்தாங்கல் பில்லாந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 37 வயது மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. விசாரணையில், ஏ.டி.எம் மையங்களில் தொடர் கைவரிசை காட்டிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் எடுக்க ஏ.டி.எம் மையத்துக்கு வரும் முதியவர்கள் மற்றும் அறியாமையிலிருக்கும் நபர்களிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி, தான் பணம் எடுத்துத்தருவதாகக் கூறி கைவரிசைக் காட்டியிருக்கிறார். ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்தியப் பின், ரகசிய எண்ணைக் கேட்டுகொள்வார். பின்னர், தவறான எண்ணை போட்டுவிட்டு, பணம் இல்லை என தன்னிடமிருக்கும் வேறு கார்டை கொடுத்து அனுப்பிவிடுவார். அவர்கள் சென்றப் பின்னர், அந்த ஏ.டி.எம் கார்டிலிருக்கும் பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிவிடுவார். இப்படியே, வேலூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் கைவரிசைக் காட்டியிருக்கிறார். சுரேஷிடமிருந்து 144 ஏ.டி.எம் கார்டுகளையும், ரூ.35 ஆயிரம் ரொக்கப் பணம், ஒரு பைக்கை வேலூர் தெற்கு காவல்நிலைய குற்றப்பிரிவுப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/pltOB3K
via
