தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரைச் சேர்ந்தவர் அய்யலுசாமி. இவர், கடந்த 1970 முதல் 1986 வரை ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1971-ல் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான போரில் பங்கேற்றுள்ளார். 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வீட்டின் முகப்புச் சுற்றுச்சுவரில் பெயின்டால் தேசியக்கொடியை வரைந்துள்ளார். அய்யலுசாமியின் வீட்டின் வழியே செல்பவர்கள் ஒரு நிமிடம் நின்று தேசியக்கொடியை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு சல்யூட் அடித்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அய்யலுசாமியிடம் பேசினோம், “எங்க ஊர்ல நிறைய பேரு மிலிட்டரியில சேர்ந்தாங்க. அந்த யூனிபார்மை பார்க்கும் போதே எனக்குள்ள ஒரு வீரம் வந்துச்சு. லீவுக்காக ஊருக்கு வர்றவங்ககிட்ட ராணுவத்துல எப்படி வேலை செய்வீங்க. என்ன மாதிரி பயிற்சிகள் கொடுப்பாங்க. பாதுகாப்பு பணியில எப்படி ஈடுபடுவீங்கன்னு ரொம்ப ஆர்வமா கேட்பேன்.
நாட்டுக்காக அவங்க மிலிட்டரியில படுற கஷ்டத்தை பெருமையாச் சொல்லுவாங்க. அவங்களோடப் பேச்சுல நாட்டுப்பற்று கலந்து இருந்துச்சு. சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே மிலிட்டரியில சேரணும்னு முடிவு செஞ்சேன். என்னை தயார் படுத்திக்கிறதுக்காக உடற்பயிற்சியும் செஞ்சேன். மனசுக்குள்ள என்னை ஒரு மிலிட்டரிகாரனாவே நினைச்சுக்கிடேன். மிலிட்டரியில சேரப் போறேன்னு வீட்ல சொன்னதும், ’அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்பா.
இங்கயே இருந்து ஒரு வேலை வெட்டியைப் பாரு’ன்னு சொல்லிட்டாங்க. ஆனா, என்னோட முடிவை நான் மாதிக்கல. ரெண்டு மூணு நாளு சாப்பிடாம கிடந்தேன். ’இவ்வளவு வைராக்கியமா இருக்கானே’ன்னு மிலிட்டரியில சேர அம்மா, அப்பா சம்மதிச்சாங்க. சந்தோஷமா மிலிட்டரியில சேர்ந்தேன். இந்தியா, பாகிஸ்தான் போர்ல கலந்துக்கிட்டேன். அதுல எங்கூட சர்வீஸ்ல இருந்த நிறைய பேரு இறந்துட்டாங்க.
அந்தப் போருல நானும் இறந்து போயிருபேன்னுதான் நினைச்சேன். எப்படியோ தப்பிச்சுட்டேன்.
மிலிட்டரியில இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்துலயும் வீட்டுக்கு முன்னால கொடி ஏத்துவேன். இந்த வருஷம் 75-வது சுதந்திர தினத்தை சிறப்பா கொண்டாடணும். அதுக்காக எதாவது வித்யாசமா செய்யலான்னு நினைச்சேன். வீட்டுச் சுவரையே தேசியக்கொடியா மாத்திட்டா என்னன்னு தோணுச்சு. பக்கத்து தெருவுல உள்ள பெயின்டரை அழைச்சு விவரத்தைச் சொன்னேன். என்னோட பென்ஷன் பணத்துல இருந்து பெயின்ட்களை வாங்கிட்டு வந்தேன். முழுக் கொடியும் வரைஞ்சு முடிக்கிற வரைக்கும் பக்கத்துலயே நின்னு கவனிச்சுக்கிட்டேன்.
என்னோட வீட்டை மிலிட்டரிக்காரர் வீடுன்னு சொன்ன எல்லாரும் சுவர்ல கொடி வரைஞ்சிருக்குற வீடுதான் மிலிட்டரிகாரர் வீடுன்னு அடையாளமாச் சொல்லுற மாதிரி ஆயிடுச்சு. தெருவுக்குள வர்ற எல்லாருமே ஒரு நிமிஷம் என் வீட்டுச் சுவரை ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டுதான் போறாங்க. இளவட்டப் பயலுக வீட்டு முன்னால எங்கூட நின்னு செல்போன்ல செல்பி எடுத்துட்டுப் போறானுக. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் வீட்டு மேல பற்று இருக்குற மாதிரி நாட்டுமேலயும் தேசப்பற்றோட இருக்கணும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/ea8Ri9P
via
