தமிழ் சினிமாவின் தலையெழுத்தை சின்னப் படங்கள்தான் மாத்தியிருக்கு! - நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணியன்

0
'முண்டாசுபட்டி'யில் தலையில் சிவப்புநிறத் துண்டு கட்டியபடி கைகளை உயர்த்தி 'தீர்க்காயுசா இரு'' என சாமியாராக காமெடியில் பின்னியெடுத்தவர் சூப்பர்குட் சுப்பிரமணியன். சமீபத்திய 'ஜெய்பீம்' படத்திலும் போலீஸாக நடித்திருப்பவர். இப்போது 'சந்திரமுகி 2', 'வெள்ளிமலை' எனப் பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

'சூரரைப் போற்று' படத்துல நீங்களும் ஒரு கதாபாத்திரம் பண்ணிருந்தீங்க சூர்யா, சுதா கொங்கரான்னு பெரிய டீம் கூட வொர்க் பண்ணின அனுபவம் எப்படி இருந்தது?

''சந்தோஷமா இருக்கு. 'சூரரைப் போற்று'ல நான் மேரேஜ் புரோக்கரா நடிச்சிருப்பேன். நான் 'வெள்ளிமலை'ன்னு ஒரு படம் பண்றேன். அதோட இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையில ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலைப் பாடியிருக்கார். மறுநாள் அவருக்கு தேசிய விருதும் கிடைச்சதுல மொத்த டீமுமே சந்தோஷப்பட்டுச்சு. சுதா கொங்கரா மேடம் ஜெயலலிதா மேம் மாதிரி..! ஸ்பாட்ல அப்படி இருப்பாங்க. அவங்க ஹைடெக்கா தெரிவாங்க. ஆனா, மதுரை ஸ்லாங், நெல்லை ஸ்லாங்னு எல்லா வட்டார மொழிகளையும் பக்காவாப் பேசி அசத்துவாங்க. சூர்யா சாருக்கு விருது கிடைச்சதும் மகிழ்வா இருக்கு. அவருக்கு விருதுகள் தொடரும். 'ஜெய்பீம்' படத்துக்காகவும் அவருக்கு விருது காத்திருக்கு.''

அஞ்சு கிருஷ்ணாவுடன்..

சுப்பிரமணி எப்படி சூப்பர்குட் சுப்பிரமணியானார்?

''இயக்குநராகணும்னுதான் சினிமாவுக்குள் வந்தேன். ஆர்.பி.சௌத்ரி சார் அப்ப டாப் புரொட்யூசர். அவர்கிட்ட ஒரு கதை சொன்னேன். கதையைக் கேட்டுட்டு 'முதல் கதையே பிரமாண்டமா சொல்றியே.. சின்னதா ஒரு கதை சொல்லி இயக்குநராகிடு'ன்னார். அது ஆம்புலன்ஸ் டிரைவர் கதை. படவுலகில் அந்தக் கதையைத் தெரியாதவங்க யாருமில்ல. ஒருநாள் சௌத்ரி சார் என்னைக் கூப்பிட்டு, 'நான் தயாரிக்கற படங்கள்ல ஒர்க் பண்ணி அப்படியே பிராக்டீஸ் பண்ணுங்க... அப்புறமா நீங்க படம் பண்ணலாம்'னு சொல்லி என்னை புரொடக்‌ஷன் கவனிக்க வச்சார். நான் வேலை செய்த படங்களின் டைட்டில்கள்ல சூப்பர்குட் சுப்பிரமணியன்னு பெயர் போட ஆரம்பிச்சி அதுவே நிலைச்சிடுச்சு. அஜித்தின் 'சிட்டிசன்'ல நான் இணை இயக்குநர். மன்னர் சரபோஜி காலேஜில் டிகிரி முடிச்ச பிறகுதான் சினிமாத் துறைக்கே வந்தேன். பார்த்திபனை வச்சு, 'கர்த்தா'ன்னு ஒரு படம் இயக்கினேன். முக்கால்வாசி படம் வளர்ந்த நிலையில் அது டிராப் ஆச்சு. இப்படி நிறைய வாய்ப்புகள் மிஸ் ஆகியிருக்கு. கடைசியில நடிகராகிட்டேன். இதுவரை ஐம்பது படங்கள் நடிச்சிருப்பேன். ஆனாலும் இன்னமும் 'முண்டாசு பட்டி' சாமியாராகத்தான் என்னைப் பார்க்குறாங்க. அந்தப் பார்வையை 'வெள்ளிமலை' மாத்தும். அதைப் போல லோகேஷ்கனகராஜின் 'மாநகரம்' படத்துல நடிச்சிருந்தேன். அதனால 'விக்ரம்'ல நடிக்க வச்சிருந்தார். கமலையே திட்டுற சீன்ல நடிச்சிருப்பேன். படத்தின் நீளத்துனால என் போர்ஷனை எடுத்துட்டாங்க.''

'வெள்ளிமலை' படப்பிடிப்பில்..

'''மேற்குத் தொடச்சிமலை', 'மைனா' மாதிரி ஒரு படமா 'வெள்ளிமலை' அமையும். அறிமுக இயக்குநர் ஓம் விஜய், எனக்கு சின்னக் கதாபாத்திரம்தான் தருவார்னு நினைச்சு, படப்பிடிப்பு போனேன். ஆனா, கதையின் நாயகன் ஆக்கிட்டார். சித்த வைத்தியர், சித்தர்னு ரெண்டு ரோல் பண்றேன். என்கூட வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணான்னு கதைக்கான ஆட்கள் இருக்காங்க. தமிழ் சினிமாவின் தலையெழுத்தை சின்னப் படங்கள்தான் மாத்தியிருக்கு. அந்த வகையில 'வெள்ளிமலை' பேசப்படும். இயக்குநர் ஓம் விஜய்க்கும் தேசிய விருது காத்திருக்கு. ஏன்னா, சௌத்ரி சார்கிட்ட இந்தப் படத்து போஸ்டரை வெளியிட கேட்டப்ப, 'என்னய்யா, டைரக்டர் ஆனா பிரபலம் ஆக லேட்டாகும். நடிகனானால் ஒரே நாள்ல பிரபலமாகிடலாம்னு நினைச்சிட்டீயா'ன்னு கேட்டவர், இந்தப் படத்துக்கு விருது நிச்சயம்னு சொல்லியிருக்கார். அடுத்து 'சந்திரமுகி-2'ல நடிக்கிறேன். மைசூர்ல ஷூட்டிங் போகுது. 'சிவலிங்கா' படத்துல நான் நடிச்சதால, இந்தப் படத்துலேயும் வாய்ப்பு கொடுத்தார். ஸ்பாட்டுல லாரன்ஸ் சார், லட்சுமிமேனன், சுபிக்‌ஷா, வடிவேலு சார்னு ஏகப்பட்ட நடிகர்கள் இருக்காங்க. நானும் எல்லோர் காம்பினேஷன்லேயும் நடிச்சிட்டிருக்கேன். இதனையடுத்து 'காடப்புறா கலைக்குழு'ன்னு ஒரு படத்துல சிவாஜி சார் கெட்டப்ல நடிக்கறேன்.''



from தமிழ் சினிமா https://ift.tt/4kt73bd
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*