வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்திருக்கும் பொன்னை மாதா கோயில் தெருவைச் சேர்ந்த 40 வயதாகும் பாலகிருஷ்ணன், லாரி ஓட்டுநராக இருக்கிறார். பொன்னை பேருந்து நிலையத்தில் இவர் நடந்து செல்லும்போது, ஹெல்மட் அணிந்து பைக்கில் வந்த மர்மநபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தோள்பட்டையில் வெட்டினார். உஷாரான பாலகிருஷ்ணன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி ஓட்டம்பிடித்தார். ஆனாலும், ஹெல்மட் அணிந்திருந்த மர்மநபர் விடாமல் துரத்திச்சென்று அவரை வெட்டினார். தொடர்ந்து பொது மக்கள் சூழ்ந்ததால், அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னை போலீஸார், பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தப்பி ஓடிய மர்ம ஆசாமியையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பொன்னை காலனி பகுதியைச் சேர்ந்த 43 வயதாகும் இளங்கோவன் என்பது தெரியவந்தது. அவரின் தம்பி பாபு ராணுவ வீரர். பணிக்காரணமாக அவர் வெளிமாநிலத்தில் இருக்கிறார். பாபுவின் மனைவி மட்டும் உள்ளூரில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனுக்கும் இளங்கோவனின் தம்பி மனைவிக்கும் ரகசிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘என் தம்பி பொண்டாட்டிக்கிட்ட பேசாதே’ என ஏற்கெனவே, பாலகிருஷ்ணனை அவர் கண்டித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், அவர் திருந்தவில்லை எனத் தெரிகிறது. தம்பி மனைவியைப் பார்க்க பாலகிருஷ்ணன் அடிக்கடி வீட்டுக்கு வந்துச் செல்வதையும் இளங்கோவன் நோட்டம் பார்த்து, கோபப்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே, அவரை தீர்த்துக்கட்ட இளங்கோவன் முடிவு செய்ததும், விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார், இளங்கோவனை கைது செய்த சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/xPJUzD3
via
