நெல்லை மாவட்டம், ஆனைக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர்மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை 29-ம் தேதி மஞ்சங்குளம் பஸ் நிறுத்தம் அருகே சாமிதுரை என்பவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அவரை சிலர் கொலைசெய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே திசையன்விளை அருகே உள்ள நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர் (23), கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் (23) ஆகிய இருவர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்ததில் இந்தக் கொலையின் பின்னணியில் ராக்கெட் ராஜா உள்ளிட்ட சிலருக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், நெல்லை அருகே உள்ள தாராபுரத்தைச் சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ் (25), ஸ்ரீராம்குமார் (21) ஆகிய இருவரை சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 11 பேர் கொண்ட கும்பல் சாமிதுரையை திட்டமிட்டுக் கொலைசெய்தது தெரியவந்தது.
இந்தக் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவரான ராக்கெட் ராஜாவுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தபோது நெல்லை மாவட்ட தனிப்படை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் கேட்டதற்கு, ”தனிப்படை போலீஸாரிடம் ராக்கெட் ராஜா பிடிபட்டுள்ளார். அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து பிடித்திருக்கிறார்கள். அவர்மீதுள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடக்கிறது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/yVoRZmz
via
