கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள சுக்காலியூர் காந்திநகர் கரட்டுபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர், சொந்தமாக புது வீடு கட்டிவருகிறார். இந்நிலையில், அந்த புதுவீட்டுக்கு பக்கவாட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை தொட்டியில், காங்கிரீட் தளத்திற்கு கொடுக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதற்கு உள்ளே இறங்கி உள்ளனர். தொட்டி இரண்டு மாதங்களாக மூடி வைத்திருந்ததால், விஷவாயு உள்ளே இருந்தது தெரியாமல் உள்ளே சென்ற, தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன்ராஜ்(23), தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஸ் (38), கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னமலைபட்டியைச் சேர்ந்த சிவகுமார் (38) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, உயிரிழந்த சின்னமலைப்பட்டி சிவகுமாரின் உறவினரான கோபால் என்பவரை காணவில்லை என அவரின் மனைவி அளித்த புகார் அடிப்படையில், சிவக்குமாருடன் பணிக்கு வந்ததாக கூறப்படும் கோபால், அதே தொட்டியில் உயிரிழந்திருக்க கூடும் என போலீஸார் சந்தேகமடைந்தனர்.
இதற்கிடையில், கோபாலின் சகோதரர் சரவணன் என்பவர் இந்தக் கட்டடத்தில் வந்து பார்த்தபோது, தனது சகோதரர் கோபாலின் செருப்புகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி, அந்த தகவலை காவல்துறையில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த செப்டிக் டேங்கில் சோதனை செய்து பார்த்ததில், சின்னமலைப்பட்டி ரங்கன் மகன் கோபால் (36), என்ற இளைஞரின் உடலை அழுகிய நிலையில் கரூர் தீயணைப்பு படை அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் நகர காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, அந்த கழிவுநீர் தொட்டிக்குள் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து பைப் மூலம் இறைத்து வெளியேற்றிவருகின்றனர். ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு மூவரின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/jK0tYLr
via
