`நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி செய்த மரியாதை..!

0

ராஜராஜசோழனுக்கு கிபி 985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் தஞ்சாவூரில் சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 1037 வது சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் சதய விழாவில், அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் விவசாயி ஒருவர் தனது வயலில் விளைந்த நெல்லில் மாலை செய்து, அதை ராஜராஜ சோழன் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்தார். இந்த சம்பவம் பார்த்த அனைவரின் கவனத்தையும் பெற்றது.

நெல் மாலையில் ராஜராஜ சோழன்

சதய விழா அன்று காலை சுமார் எட்டு மணியளவில் பெரிய கோயில் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தருமபுர ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு முதலில் மாலை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயில்

இதையடுத்து மோகன் என்ற விவசாயி, ராஜராஜ சோழன் சிலைக்கு அறுவடை செய்த நெற்கதிர்களை கொத்தாக வைத்து அதில் செய்த நெல் மாலையினை அணிவித்து மரியாதை செய்து வணங்கியது பலராலும் கவனிக்கப்பட்டது. இது குறித்து விவசாயி மோகனிடம் பேசினோம், "பாபநாசம் தாலுகா, மாரியம்மன் கோயில் அருகே உள்ள அருண்மொழிப் பேட்டை என்னோட சொந்த ஊர்.

சோழமன்னர்கள் நீர் நிலைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்தவர்கள். ஓடி வரும் நீரை ஒழுங்குப்படுத்தி தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்ற வகையில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை ஆயிரம் ஆண்டுகளை கடந்து, பாசன பரப்பான விளைநிலைங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு பெரும் ஆதாரமாக திகழ்கிறது. விவசாய வளத்தை பெருக்கிய பெருமைக்குரியவர்கள்.

நெல் மாலை

மாமன்னன் ராஜராஜ சோழன் ஏரி, குளங்களை வெட்டி நூற்றுகணக்கான நீர் நிலைகளை உருவாக்கியவர். மழை நீரின் அவசியத்தை உணர்ந்து அந்த காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு முறையினை அறிமுகப்படுத்தியவர். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளை ஊக்கப்படுத்தி உருவாக்கியவர். விவசாயிகளுக்கு உதவிகளை செய்து விளை நிலங்கள் மட்டுமின்றி அவர்களையும் செழிப்பாக மாற்றியவர் என ராஜராஜனின் சிறந்த ஆட்சி முறைக்கான காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன் சதய விழாவில் என் வயலில் விளைந்த நெல் மணிகளை அவருக்கு படைக்க நினைத்தேன். அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை அறுத்து கொத்தாக வைத்து மாலை செய்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாலை ரெடியாவிட்டது. சதய விழாவான இன்று நெல் மாலையினை எடுத்து வந்து ராஜராஜ சோழனுக்கு அணிவித்த என்னை எல்லோரும் பாரட்டினார்கள். பொன்னியின் செல்வன் கழுத்தில் இருந்து என்னோட நெல் மணி மாலை மின்னியது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது" என்றார் நெகிழ்ச்சியுடன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2LQADwM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*