``புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது” – முதல்வர் ரங்கசாமியின் விடுதலை நாள் உரை

0

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை பெற்றது. அதனடிப்படையில் புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “பிரெஞ்சு ஆட்சியாளர்கள் எந்த இடத்தில் கப்பலேறிச் சென்றார்களோ, அதே இடத்தில் ஆண்டுதோறும் தேசியக் கொடியை ஏற்றி நாம் விடுதலை திருநாளை கொண்டாடி வருகிறோம். இந்த இடத்தில்தான் விடுதலை பெற்ற புதுச்சேரியின் வரலாறு தொடங்குகிறது. எனது தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கிறோம்.

கடந்த 2020-21-ம் ஆண்டு உள்நாட்டின் உற்பத்தி மதிப்பீடு சுமார் 35,000 கோடி ரூபாயாக இருந்தது. அது 2021-22-ம் ஆண்டில் சுமர் 37,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில் 39,000 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. கூட்டுறவுத் துறையின் மூலம் 505 உறுப்பினர்களுக்கு அபராத வட்டி மற்றும் வட்டி மானியமும், 4,787 விவசாயிகளுக்கு விவசாய கடனும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி விடுதலை நாள்

பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவி திட்டம் 2021 மற்றும் 2022 கல்வியாண்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக 12.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 276 மருத்துவ மாணவர்களும், 2,400 பொறியியல் மாணவர்களும், 494 செவிலியர் மாணவர்களும் பயனடைவார்கள். தற்போதுள்ள மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மகளிர் பொறியியல் கல்லூரியில் மாற்றப்பட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் 240 மாணவிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு 1,000/- ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல முதியோர் உதவி தொகைக்காக விண்ணப்பித்து நிலுவையில் உள்ள 16,769 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்து திருமணங்களை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதங்களை போக்கும் வகையில், புதுச்சேரி இந்து திருமண பதிவு விதிகள் 2021-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருமண நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை துணைப் பதிவாளர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் திருமண நாளிலிருந்து 40 ஆண்டுகள் வரை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் சிறப்பு அனுமதி வழங்க மாவட்ட பதிவாளருக்கும், 40 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனால் சிறப்பு செயலருக்கும் (வருவாய்) சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைவதற்கு, அரசு இயந்திரம் திறம்பட இயங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். எனவே பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு மாபெரும் பணி நியமன இயக்கத்தை எனது அரசு தொடங்கியுள்ளது. அதன்மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறைகளில் 1,056 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

கடல் அரிப்பின் காரணமாக புதுச்சேரியின் கடலோர குடியிருப்புகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் விளைவாக அண்மை காலங்களில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் மீனவ பெருங்குடி மக்களின் வாழ்விடம் மட்டுமல்லாமல், வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி பகுதிகளுக்கு இடையே தமிழகப் பகுதிகளும் இடையே வருவதால், பொதுவான தீர்வை காண வேண்டியது அவசியமாகிறது. எனவே வடக்கே மரக்காணம், தெற்கே கடலூர் வரையிலும், காரைக்காலில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலும் முழுமையான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய கடலோர ஆய்வு மையத்தை எனது அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடற்கரை சுற்றுச்சூழலை பாதிக்காமலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் விரிவான கடற்கரை மேலாண்மை திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது. மத்திய புவி அறிவியல் மையம் அளிக்கும் அந்த திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்றி மீனவர்களின் நலனை பாதுகாப்போம்” என்றார். 



from மாவட்ட செய்திகள் https://ift.tt/RFdz3W1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*