கர்நாடகா மாநிலம், மங்களூரில் ஓர் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. “இது சாதாரண விபத்து அல்ல. தீவிரவாதத் தாக்குதலுக்கான முன்னெடுப்பு” என கர்நாடக காவல்துறை கூறியிருக்கிறது. ஆட்டோவில் பயணித்து காயமடைந்த ஷாரிக்-தான் இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டார் என்பது தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே மங்களூர் சம்பவத்துக்கும், கடந்த மாதம் நடந்த கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ஷாரிக், கடந்த செப்டம்பர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்திருக்கிறார். அப்போதுதான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் பழகி, அவரின் ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கியிருக்கிறார். இது தொடர்பாக சுரேந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
காந்திபுரம் பகுதியில் அவர் தங்கியிருந்த `மதி மகிழ் வியன் அகம்' என்ற விடுதிக்கு போலீஸார் சீல் வைத்தனர். மேலும், அந்த விடுதியின் உரிமையாளர் காமராஜ் என்பவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்துப் பேசும் போலீஸார், “கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின், மங்களூர் சம்பவத்தில் காயமடைந்த ஷாரிக் இருவருமே ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள்தான். ஐ.எஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சதித்திட்டம் தீட்டிவந்திருக்கின்றனர்.
தற்போது வரை ஜமேசா முபினும் ஷாரிக்கும் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கோவையில் தங்கியிருந்தபோது ஷாரிக் யாரையெல்லாம் சந்தித்தார் எனத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/L2o8ZPJ
via
