`2000 மனுக்கள்; 350 பயிற்சி வகுப்புகள்!' - சாதித்து வரும் ஆர்.டி.ஐ பயிற்சியாளர் மதுரை ஹக்கிம்

0
"மதுரை மாநகரட்சி அலுவலகத்தில் வைத்திருந்த போர்டுதான் ஆர்.டி.ஐ பற்றிய சிந்தனையை எனக்குள் ஏற்படுத்தியது" என்று சாதாரணமாகச் சொல்லும் ஹக்கிமை, ஆர்.டி.ஐ ஹக்கிம் என்று சொன்னால்தான் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவே தெரியும்.

கடந்த காலங்களில் ஆர்.டி.ஐ மூலம் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் சாதாரணமானதல்ல. மத்திய அரசால் மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டபோது அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும், மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் வரிப் பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலையும், அரசுப் போக்குவரத்துக்கழகம் அடைமானம் வைக்கப்பட்ட தகவலையும் பொதுஜனம் கேட்க நினைக்கும், ஆனால் கேட்கத் தயங்கும் ஒவ்வொரு முக்கிய விஷயம் குறித்தும் தகவல் பெற்று அம்பலப்படுத்தியவர் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த ஹக்கிம்.

ஆர்.டி.ஐ ஹக்கிம்

மதுரை வைகையாற்றில் 700 ஆண்டுகள் பழைமையான திருமலைராயர் மைய மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் அதை புனரமைக்க ஹக்கிம் பொதுநல வழக்குத் தொடுத்ததைத் தொடர்ந்து ரூ.43 லட்சம் செலவில் பொதுப்பணித்துறையால் பணி மேற்கொள்ளப்பட்டது. ஹக்கிமின் முயற்சியை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அப்போது பாராட்டினார்.

சமீபத்தில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் வாகனப் பராமரிப்புக்கு 5 ஆண்டுகளில் 51 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த தகவலைச் சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.

எம்.பி.ஏ படித்துள்ள ஹக்கிம் இதுவரை 2000 ஆர்.டி.ஐ மனுக்களை எழுதி அதில் பலவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான ஆர்.டி.ஐ ஆர்வலர்களை உருவாக்கியும் உள்ளார். தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஐ குறித்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். கூடவே பொது நோக்குடன் தமிழகம் முழுவதும் செயல்படும் ஆர்.டி.ஐ ஆர்வலர்களை ஒருங்கிணைத்துள்ளார். இவர் எழுதிய 'தகவல் பெறும் உரிமை' எனும் நூல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆர்.டி.ஐ

தமிழகம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஹக்கிமிடம் பேசினேன், "இன்று ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சாமானிய மக்களைப் பார்த்துப் பயப்படும் ஒரு விஷயம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகார அமைப்புகளிடம் தகவல் பெற உரிமை உள்ளது. வெள்ளைத்தாளில் பத்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி நாம் கேட்கும் கேள்விகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழலை வெளிக்கொண்டுவர முடியும், அல்லது பல கோடி ரூபாய்க்கான திட்டத்தைக் கொண்டு வர முடியும். இச்சட்டம் சாமானிய மனிதனின் சக்தி வாய்ந்த ஆயுதம்" என்றவரிடம்,

"எப்படி ஆர்.டி.ஐ ஆர்வலரா மாறினீங்க?" என்றோம்.

"எம்.பி.ஏ படித்து சுயதொழில் செய்தபடி சராசரி மனிதனாக இயங்கிக்கொண்டிருந்த நான், 2009 -ல் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு ஒரு வேலையாகச் சென்றபோது அங்குத் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு விளம்பரத்தைப் பார்த்து ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சோதனை முயற்சியாக எங்கள் தெருவில் போடப்பட்ட சாலை குறித்து தகவல் கேட்டு மனு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம், பதில் வந்தது. அதன் மூலம் தெருவிலுள்ள சாலை முறையாக அமைக்கப்பட்டது. பத்து ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிய மனு மூலம் இப்படி ஒரு மாற்றமா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. ஒவ்வொரு மனிதரும் இதைச் சரியாகப் பயன்படுத்தினால் எந்த முறைகேடும் நடக்காது என்று நினைத்தேன். அதன்பின் பல மனுக்கள் எழுதிப் பல விஷயங்களை வெளியே கொண்டு வந்தேன். பல நல்லதும் நடந்தது.

ஆர்.டி.ஐ ஹக்கிம்

இவ்வளவு சிறந்த சட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், அதன் பயனை அவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். இதற்காக நண்பர்களுடன் சேர்ந்து 'மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை'யைத் தொடங்கினேன். மனு மூலம் தகவல் பெறுவது மட்டுமல்ல, அரசு அலுவலகங்களில் கள ஆய்வு செய்து ஆவணங்களைச் சரி பார்க்கவும் உரிமை உள்ளது என்பது குறித்தும் பயிற்சி அளித்து தற்போது பல அரசு அலுவலகங்களில் மக்கள் ஆய்வு செய்கிறார்கள். இதுவரை 350க்கும் மேல் பயிற்சி வகுப்புகள் நடத்திவிட்டேன். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்.டி.ஐ ஆர்வலர்களாக மாறி வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உதாரணத்துக்கு கொட்டாம்பட்டி அருகிலுள்ள கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஆர்.டி.ஐ-யை பயன்படுத்தி தங்கள் பகுதிக்குத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறார்கள். அப்பகுதியில் அரசு அதிகாரிகள் எந்த முறைகேடும் நடத்த முடியாது.

மதுரை எய்ம்ஸ் நிலவரம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள கடன் பிரச்சனை, மதுரை மாநகராட்சி போலி பில் விவகாரம், கிராம ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடு உட்படப் பல விவகாரங்களை வெளியில் கொண்டு வர இதுவரை 2000 மனுக்களை எழுதி தகவல் பெற்றுள்ளேன். இன்னும் இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் 'தகவல் பெறும் உரிமைச் சட்டம்' என்ற நூலை எழுதினேன். இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முக்கிய காரணமான முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மூலம் வெளியிட்டேன். என்னைப் போல் செயல்படும் பல்வேறு மாவட்டங்களிலுள்ள ஆர்.டி.ஐ ஆர்வலர்கள், முன்னோடிகள் எல்லோரையும் இணைத்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பெரிய அளவிலான நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடத்தினோம்.

'தகவல் பெறும் உரிமை' நூல் வெளியிட்டபோது...

உலகிலேயே சுவீடன்தான் முதன் முதலில் 1766-ல் தகவல் பெறும் உரிமையை தன் மக்களுக்கு வழங்கியது. தமிழகத்தைச் சேர்ந்த அருணாராய் தலைமையில் இயங்கிய மஸ்தூர் கிஷான் அமைப்பு விவசாயக்கூலிகளின் சம்பள பதிவேட்டினை கேட்டு 1990-களில் நடத்திய போராட்டம்தான் தகவல் பெறும் உரிமையின் அவசியத்தை அனைவரையும் உணர வைத்தது. தகவல் பெறும் உரிமைச் சட்ட மசோதாவை 1997-ல் தமிழகச் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நாட்டிற்கே வழி காட்டினார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. அதன் பின்புதான் 2005-ல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நாடெங்கும் கொண்டு வந்தது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Pg5YhCU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*