சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியைச் சேந்த லட்சுமணன் என்பவர், கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்துவரும் லட்சுமணன், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். தேவைப்படும் இடங்களில் கிடை அமைத்தும் தங்கி வந்திருக்கிறார். அதன்படி நேற்று இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வேப்பூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து ஆடுகள் மீது மோதியது. அந்த விபத்தில் 95 ஆடுகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.
அத்துடன் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல ஆடுகளின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த லட்சுமணனும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தால் அந்த பேருந்தின் பின்னால் வந்துகொண்டிருந்த அதே பணிமனையைச் சேர்ந்த மற்றொரு பேருந்தும், தனியார் பேருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் பேருந்தில் இருந்த பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீஸார், லட்சுமணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல சாலை முழுவதும் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தியதுடன், போக்குவரத்து நெரிசலையும் சரிசெய்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/PhibqMH
via
