``தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் பொருள்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ரேசன் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், எங்கள் ஆட்சியில் தரமான பொருள்களை முறையாக விநியோகம் செய்தோம். மூத்த குடிமக்கள் கைரேகை பதிவதில் தாமதம் ஏற்படுவதால் பொருட்ள்கள் பிறகு தருவதாகக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
தி.மு.க அரசு, சொன்ன திட்டங்களை நடைமுறைப் படுத்தவில்லை. தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கு தி.மு.க.வினர் சொன்னதுபோல ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும்தான் என்று சொல்லாமல் எல்லோருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே போல் கடத்தல் வண்டிகளை சீஸ் செய்ய வேண்டும். உணவுப் பொருள் கடத்தல் திடீர் என்று நடக்கவில்லை.
அதேபோல் போதைப் பொருள் சப்ளையை தடுத்து நிறுத்தவேண்டும். இதற்கு ஆணி வேராக இருப்பவர்களை கைது செய்ய வேண்டும்." என்றவரிடம், `அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் குறித்து பேசியுள்ளாரே...' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்னது உண்மை. மன்னர் பரம்பரையைத்தான் ஒழித்துள்ளோம். கலைஞர் பரம்பரையை ஒழிக்க முடியவில்லை. இனி கலைஞர் குடும்பத்திலிருந்து வாரிசு வரக்கூடாது என்றுதான் கட்சியினர் நினைப்பார்கள். வாரிசுகள் வந்தால் அவர்கள்தான் அமைச்சராவர்கள் என்பதால்தன் கே.என்.நேரு சொல்லியுள்ளார்.
இன்பநிதிக்கு குழந்தை பிறந்தாலும் கொடி பிடிப்பார்கள். அதனை அமைச்சர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.” என்றார்
தொடர்ந்து, `நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் நிலை' குறித்து கேட்டதற்கு, "முனைப்பாக இருக்கிறோம், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். எங்கள் ஆட்சியை எண்ணி பார்க்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்பின்மை, போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்த ஆட்சியில் உள்ளது. தி.மு.க., அரசு செயலற்ற அரசாக உள்ளதால், நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எந்தக் கட்சி எங்களுடன் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/F1ZstCW
via
