தூத்துக்குடி, அண்ணாநகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால், 2 வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். மாரியம்மாளின் உடன் பிறந்த சகோதரர் முருகேசன் என்பவரும் அதே தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகேசனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அவரின் கடனை தங்கை மாரியம்மாளும், கணவர் ராம்குமாரும் அடைத்துள்ளனர். அதற்கு ஈடாக முருகேசனுக்குச் சொந்தமான வீட்டில் மாரியம்மாளும், ராம்குமாரும் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே, முருகேசனின் மனைவி செந்தமிழ் செல்வியிடம் மாரியம்மாள் ரூ.5 லட்சம் சீட்டு சேர்த்து வந்துள்ளார். அந்தச் சீட்டு பணத்தை முருகேசன் எடுத்துக் கொண்டாராம். இந்த பணம் தொடர்பாக மாரியம்மாளுக்கும், முருகேசனுக்கும் இடையே தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது. அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதும் உறவினர்கள் விலக்கி விடுவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சீட்டு பணம் கேட்டு ராம்குமாரின் மனைவி முருகேசனின் வீட்டிற்குச் சென்று விட்டார்.
“சீட்டு பணத்தை உங்க அண்ணன் செலவு பண்ணிட்டார். அவர்ட்ட இப்போ பணம் இல்ல” என முருகேசனின் மனைவி சொல்ல, “அவனுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. ஒரு வாரத்துக்குள்ள பணத்தை தரலேன்னா பிரச்னை ஆயிடும்” என மாரியம்மாள் கூறிச் சென்றாராம். அத்துடன் அண்ணன் முருகேசனுக்கும் போன் செய்து பணம் தருவது சம்மந்தமாக பேசியுள்ளாராம். இந்த நிலையில்தான், நேற்று (25-ம்தேதி) இரவில் ராம்குமார் தன் வீட்டிற்கு அருகில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் ஆகிய இருவரும் ராம்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் ராம்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டினர். அவரும் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் கிறிஸ்துமஸ் நாளில் இரவில் உடன்பிறந்த தங்கை மற்றும் தங்கையின் கணவரை அண்ணனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினைன் ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/WxUo42i
via
