``அதிமுக-வுக்கு வரலாற்று சிறப்பை எடப்பாடி பெற்று தந்துள்ளார்!" - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

0

தமிழக அரசை எதிர்த்து அ.தி.மு.க நடத்தவுள்ள ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டம்

அக்கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், "அடுத்த ஆண்டிற்கான ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும்.

இந்த மாநாட்டிற்கான அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த அடிப்படையில் நம் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அவர் பங்கேற்று நமது இயக்கத்திற்கு மாபெரும் வரலாற்று பெருமையை தேடித் தந்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

இதன் மூலம் இந்த இயக்கத்திற்கும், கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், மிகப்பெரிய கௌரவத்தை எடப்பாடியார் பெற்றுத் தந்துள்ளார்.

எடப்பாடியாரின் வெற்றி மேலும் தொடர புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் அருளாசியும், தொண்டர்கள் ஆதரவும், மக்கள் பேராதரவும் அவரின் கரத்தை மேலும் பலப்படுத்தும். கழகத்திற்கு மாபெரும் வலிமையை உருவாக்கித் தந்துள்ளவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி ஆணைக்கிணங்க, தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,  விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் 9-ம் தேதி மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும், 13-ம் தேதிஅனைத்து நகராட்சி பகுதிகளிலும், 14-ம் தேதி அனைத்து ஒன்றியப் பகுதிகளும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்ளை பெரும் திரளாக பங்கேற்க செய்திட வேண்டும்.

ஜி-20 - இந்தியா - கூட்டம்

கழக அம்மா பேரவை சார்பில் பிப்ரவரி 23-ம் தேதி 51 ஏழை, எளிய மணமக்களுக்கு நடத்தப்படும் திருமணத்தை எடப்பாடியார் நடத்தி வைக்கிறார். அதற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி வருகிற 11-ம் தேதி டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

தற்போது வங்க கடலில், புதிதாக  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 7- ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக சாப்பாடு சமைத்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் சேர்ந்து சமையல் வேலை செய்து கட்சியினரை ஆச்சரியப்படுத்தினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pW0HOtZ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*